இயக்குனர் ஷங்கரின் தயாரிப்பில், இயக்குனர் சிம்புதேவன் வழங்கும் இரண்டாவது படைப்பு.
முதல் படைப்பான “இம்சை அரசன் 23ஆம் புலிகேசி”யின் வெற்றி, இந்தப் படத்தின் மீது சற்றே எதிர்பார்ப்பைத் தூண்டி இருந்தது.
படத்தின் தலைப்பு, கஞ்சா கருப்பு, சந்தானம் எல்லாம் சேர்ந்து இது ஒரு முழு நீள காமெடிப் படம் என்று தோன்ற வைத்தது. ஆனால் நிஜத்தில் அப்படி இல்லை.
இயக்குனருக்குப் பல விதமான விஷயங்களில், கருத்து கூறும் ஆர்வம் இருக்கிறது என்பது ஒன்று மட்டுமே தெரிகிறது. படம் முழுக்க அவரின் போதனைகளுக்குத் தான் நேரம் சரியாக இருக்கிறது.
கஞ்சா கருப்போ, சந்தானமோ அவர்களது இயல்பாய் நடித்திருந்தால் கூட, நகைச்சுவை மிளிர்ந்து இருக்கும். இயக்குனர் அதையும் விடவில்லை.
வித்யாசாகரின் இசையும் அப்படி ஒன்றும் சொல்லிக் கொள்ளும்படி இல்லை, “காதல் செய்” பாடல் சற்றே பரவாயில்லை.
கிறுக்கல்ஸ்.காம் மதிப்பெண் : 39 %
மொத்தத்தில் அறை எண் 305-ல் கடவுளின் போதனை.
வணக்கம்
படம் பரவாயில்லைங்க பார்க்கலாம். நிறைய விஷயங்கள் இரசிக்கிற மாதிரி இருந்தது.. முழு நீள நகைச்சுவை படத்தை எதிர்பார்த்துக்கிட்டு பார்த்தா பிடிக்காதுதான்.
ஜாவா கணேசன் கதாபாத்திரம் நல்லாயிருக்கு, லாட்ஜ் மானேஜர் (M S பாஸ்கர்), கஞ்சா கருப்பு(?) இவர்களோட அந்த புத்தர் சிலை நகைச்சுவை இரசிக்க வைச்சுது..
கூட்டநெருக்கடியும், வாகன நெரிசலுமான சாலையைக் காட்டி இதுதானே நீ படைச்ச உலகம்னு கடவுளைக் கேட்கும்போது உடனே அவர் விஷ்ஷ்ஷ்க்க்னு கை அசைக்க.. பழங்கால மண்பாதை.. அங்கொன்றும் இங்கொன்றுமாய்க் குடிசை வீடு.. நிறைய மரங்கள்.. இப்படி ரம்யமான இடத்தைக் காட்டி இதுதான் நான் படைச்சது.. இன்னும் கேட்டா நான் படைச்சப்ப வெறும் மரங்கள் தான் இருந்ததுன்னு கடவுள் சொல்வார்.. நிச்சயம் ஒரு கணம் எல்லாரும் யோசிச்சிருப்பாங்க.. மனசாட்சி உள்ளவங்க கண்டிப்பா நாமும் இந்த மாற்றத்துக்கு காரணம்னு ஒத்துக்கிட்டிருப்பாங்க.. இனி இப்படி நம்ம உலகத்தைப் பாழாக்கக்கூடாதுன்னு (அட்லீஸ்ட் மனசுலயாவது) யோசிச்சிருப்பாங்க..
இப்படி நிறைய யோசிக்க வைச்ச படம் இது. எல்லோரும் ஒரு தடவை பார்க்கலாம்.. நான் இன்னும் ஒருமுறை கூட பார்ப்பேன்.
அன்புடன்
கீதா
நன்றி கீதா, உங்கள் பார்வையைப் பதிந்தமைக்கு.
படத்தின் சில நல்ல விஷயங்களைச் சுட்டிக் காட்டியிருக்கிறீர்கள்.
சதீஷ்,
நீங்கள் சொன்னது ரொம்ப சரி.படம் முழுக்க போதனைகள்.ஆனால் கீதா எழுதியது போல் சில காட்சிகள் நம்மை ரொம்ப யோசிக்க வைத்தது.
நகைச்சுவையை எதிர்பார்த்ததில் ஏமாற்றமே.
சில காட்சிகள் மனதை கனக்க செய்தது..
முகுந்தன்
ஆம் முகுந்தன். இந்த விமர்சனம் சற்றே அவசரமாகப் பதிவிடப்பட்டுவிட்டது. அடுத்த முறை முழுமையாய் எழுத முயற்சிக்கிறேன்.
-சதீஷ்