15

தேடினேன் தேவ தேவா – அழைக்கிறான் மாதவன்

ஸ்ரீராகவேந்திரா – திரைப்படத்தில், இறுதிக் கட்டத்தில் வருகிறது இந்தப் பாடல்.
ஸ்ரீராகவேந்திரர் சமாதியடையும் தறுவாயில், அவர் பாடுவது போல் தொடங்கி, அவரது சீடர்கள் முடிப்பதுபோல் உள்ள பாடல்.

பாடலைத் தனியாக ஒரு முறை கேளுங்கள். பிறகு படத்துடன் பாருங்கள். பாட்டு முதலில் உருவாக்கப் பட்டதா, இல்லை காட்சிகளைப் பார்த்துவிட்டு, பின்னணி இசை சேர்க்கும்போது ராஜா சார் சேர்த்துவிட்ட பாடலா எனக் குழம்பும் அளவுக்கு, காட்சியுடன் ஒன்றிய ஒரு பாடல்.

முதலில், சமாதி நிலையை அடைவதற்கு முன்னர், ஸ்ரீராகவேந்திரரே பாடுவது போலத் தொடங்குகிறது பாடல். அவர் கண்களில், நீல வண்ணக் கண்ணன் குழலோடு தோன்றி, அவரை “வா” என அழைக்கும் காட்சி தெரிகிறது. மாசில்லாத தூயனுடன் கலக்கும் ஆவல், அவர் குரலில் வெளிப்பட, மென்மையாகப் பாடலைத் தொடங்க “கே.ஜே.யேசுதாஸ்”ஐத் தேர்ந்தெடுக்கிறார் ராஜா சார்.

கண்ணனின் குழலோசைக்குப் பிறகு பாடல் தொடங்குகிறது.

அழைக்கிறான் மாதவன்…ஆநிரை மேய்த்தவன்…
மணிமுடியும் மயிலறகும்
எதிர்வரவும் துதிபுரிந்தேன்…
மாதவா…
கேசவா…
ஸ்ரீதரா…
ஓம்…

இப்போது தான் பாடலில் தாள இசை சேர்கிறது.
அதுவும் சீரான, சற்றே அதிக இடைவெளியில், இறுதிக் கட்டத்தை நெருங்கிவிட்ட ஒரு வாழ்வைக் குறிப்பால் சொல்லும் ஒரு தாளம்.

தேடினேன் தேவ தேவா…தாமரைப் பாதமே…
வாடினேன் வாசு தேவா…வந்தது நேரமே…
ஞான வாசல் நாடினேன்.
வேத கானம் பாடினேன்
கால காலம் நான் உனைத்
தேடினேன் தேவ தேவா…தாமரைப் பாதமே…

காதில் நான் கேட்டது…வேணு கானாமிருதம்…

வேணு கானம் – என்றாலே குழலிசை தானே, அதுதான் ராஜா சார் அங்கே ஒரு சின்னத் துளியாக மெல்லிய குழலோசையை வைத்து இருக்கிறாரோ?

கண்ணில் நான் கண்டது…கண்ணன் பிருந்தாவனம்
மாயனே!
நேயனே!
மாசில்லாத தூயனே..
ஆத்ம ஞானம் அடைந்த பின்னும்
தேடினேன் தேவ தேவா…தாமரைப் பாதமே

இதற்குப் பிறகு ஸ்ரீராகவேந்திரர் இறைவனுடன் ஒன்ற, அவரது சீடர்கள் பாடுவதாகப் பாடல் தொடர்கிறது.
இறைவனுக்கும் பக்தனுக்கும் இருந்த மெல்லிய உறவைச் சொல்லிக் கொண்டு வந்த பாடல், இப்போது சீடர்களுக்கும் குருவிற்கும் இடையேயான பந்தத்தைச் சொல்ல ஆரம்பிக்கிறது.
முதலில் அவர் அருகில் இருக்கும் சீடர்கள் பாடுகிறார்கள். இதற்கு கணிரென்ற குரலுடைய “டி.எல்.மஹாராஜன்”ஐத் தேர்ந்தெடுக்கிறார் ராஜா சார்.

குருவே சரணம்….
குருவே சரணம்…
ராகவேந்திரா ஸ்ரீராகவேந்திரா…
ராகவேந்திரா ஸ்ரீராகவேந்திரா…
ராகவேந்திர ராகவேந்திர ராகவேந்திர ராகவேந்திர…
குருவே சரணம்….
குருவே சரணம்…

இதற்கிடையில், மற்றொரு சீடர் [படத்தில் டெல்லி கணேஷ்], முக்தி நிலை அடைவதற்குள் தன் குருவைத் தரிசிக்க வந்து கொண்டிருக்கிறார். அவருக்குப் பாதையில் சில தடங்கல்கள் நேர்கிறது. அதையெல்லாம் தாண்டி எப்படியாவது குருவைத் தரிசிக்க வேண்டுமே என்கிற பதட்டத்துடன் இருக்கிற இந்த சீடரின் உணர்வைச் சொல்ல ஆரம்பிக்கிறது பாடல்.

ராஜா சார் எத்தனையோ திரைப்படக் காட்சிகளுக்குப் பின்னணி இசை சேர்த்துக் காட்சியில் கதா பாத்திரங்களின் உணர்வை நமக்கு வெளிப்படுத்தி இருக்கிறார். அது அவருக்கு சர்வ சாதாரணம்.
ஆனால் ஒரே பாடலில் இப்படிப் பல உணர்வுகளைக் காட்டுவது சற்று கடினம் தானே.
யேசுதாஸில் தொடங்கி, டி.எல்.மஹாராஜன் பாடும் போதே பாடல் சற்றே உயர்ந்த ஸ்தாயிக்குச் சென்று இருக்கிறது.
இப்போது அது இன்னும் உச்ச ஸ்தாயிக்கு எடுத்து செல்ல வேண்டும்.
இந்த சீடர் குரலாய் ஒலிக்க வேறொருப் பாடகரும் வேண்டும்.
இதற்கு ராஜா சார் தேர்ந்தெடுப்பது “மலேசியா வாசுதேவன்”.

ஞானத் திருமேனி காண வர வேண்டுமே…
சீதப்பூ வண்ணப் பாதம் தொழ வேண்டுமே…
பக்தன் வரும்போது பாதை தடையானதே…
காட்டுப் பெருவெள்ளம் ஆற்றில் உருவானதே…
தாயாகி தயை செய்யும் தேவா…
தடை நீங்க அருள் செய்ய வா வா…
நான் செய்த பாவம் யார் தீர்க்கக் கூடும்…
நீ வாழும் இடம் வந்து நான் சேர வேண்டும்…

காட்சிகள் மாறி, திரும்பவும் ஸ்ரீராகவேந்திரர் இருக்கும் இடத்துக்கு வருகிறோம். சீடர்கள் உச்ச ஸ்தாயியில் தங்கள் குருவின் பெயரை மந்திரம் போல உச்சரிக்கிறார்கள்.

குருவே சரணம்….
குருவே சரணம்…
ராகவேந்திரா ஸ்ரீராகவேந்திரா…
ராகவேந்திரா ஸ்ரீராகவேந்திரா…
ராகவேந்திர ராகவேந்திர ராகவேந்திர ராகவேந்திர…
குருவே சரணம்….
குருவே சரணம்…
ராகவேந்திர ராகவேந்திர ராகவா
குரு ராகவேந்திர ராகவேந்திர ராகவா…

உணர்வுகளை இசையில் கொண்டுவருவதில் ராஜா ராஜா தான். என்ன சொல்கிறீர்கள்?
பாடலைக் கேட்க கீழே க்ளிக்குங்கள்..
[audio:SriRaghavendra-Thedineindevadeva.mp3]

படத்துடன் பார்க்க கீழே க்ளிக்குங்கள்…
YouTube – தளத்தில் ஏற்றிய செந்திலுக்கு நன்றி.

sadish

15 Comments

  1. வணக்கம்

    இந்த பதிவெழுத உங்களுக்கு எவ்வளவு நேரம் ஆச்சுங்கிறது ஒரு வியப்பு, அதைவிட இவ்வளவு நுணுக்கமான விஷயங்களை எழுதுணும்னா நீங்க எத்தனை முறை இந்தப் பாடலை இரசிச்சு கேட்டிருப்பிங்கங்கிறது பிரம்மிப்பா இருக்கு.

    இந்தப் பாடல் எனக்கு எப்பவும் பிடிக்கும். உங்கள் விமர்சனத்தை படித்தபின் பாடலை பார்த்தேன்.. இந்த முறை வித்தியாசமான கோணத்தில் இந்தப்பாடல் தெரிந்தது.

    தெய்வீக இசை, அருமையான விமர்சனம். பாடலுக்கு நன்றி.

    வாழ்த்துக்கள்

    அன்புடன்
    கீதா

    • அருமையான உங்கள் எழுத்துக்களும் காட்சியமைப்புகளும் வர்ணிக்க முடியாத வார்த்தைகள்

  2. சதீஷ்,

    எங்கள் வீட்டில் அனைவருக்கும் மிகவும் பிடித்த பாடல் இது. முக்கியமாக என் நான்கு வயது மகன் மிகவும் விரும்பும் பாடல்.அநேகமாக தினமும் ஒருமுறை கேட்பான்.

    நீங்கள் எழுதி இருப்பது போல் “காதில் நான் கேட்டது…வேணு கானாமிருதம்… ”
    என்ற இடத்தில் புல்லாங்குழல் இசை அற்புதம்.இந்த பாடலை இரவில் அமைதியான நேரத்தில் கேட்கும்பொழுது எனக்கு எப்பொழுதும் கண்ணனை நேரே பார்ப்பது போல ஒரு உணர்வு உள்ளுக்குள் வரும். நான் மிகவும் விரும்பும் பாடல்களில் இதுவும் ஒன்று.

    இளையராஜா ஒரு மகா கலைஞன். ஒரு நிகழ்ச்சியில் SPB “He is one of the Finest Music composers India has ever produced” என்று சொல்லியிருப்பார் .ரொம்பவும் சரியான வார்த்தைகள்.

    முகுந்தன்

  3. What ever you felt about that song is 100% true. That song is indeed an excellent song. Like your son i too listen to it as often as possible. As a devotee of Rama, as a fan of Ilayaraja, and also a fan of rajini, that song is one of my favourites. I also like “rama namam oru vaedhamae” from the same movie. Raja has worked wonders in it. That is also a music master piece, if possible write a review on that too. (not compulsory 🙂

  4. More than the song, it shows how much you have impressed and any one read this defintely hear this song once again. Very emotional and beautiful comments….Hats off…

  5. அதி அற்புதமாக எழுதியிருக்கிறீர்கள். இனி இந்தப் பாடலைக் கேட்கும்போதெல்லாம் இன்னும் அனுபவித்துக் கேட்க செய்தமைக்கு நன்றி. உங்கள் பக்திக்கும் இசைஞானத்துக்கும் அடி பணிகிறேன்.
    amas32

  6. வணக்கம்

    உங்கள் முயற்சிக்கு எங்கள் வாழ்த்துக்கள்.
    இந்த பாடலை எழுதியவா் யார்.
    மெய்சிலிர்க்கும் வரிகள்!

    நன்றி

  7. தங்கள் முயற்சிக்கு எனது வணிக்கங்கள், பாராட்டுக்கள் மற்றும் வாழ்த்துக்கள்…..

Leave a Reply to amas32 Cancel reply

Your email address will not be published. Required fields are marked *