எப்படி மனம் துணிந்ததோ- பாம்பே ஜெயஸ்ரீ

அவ்வப்போது நான் மிகவும் ரசித்த பாடல்களை எழுதி வந்து இருக்கிறேன்.
இந்த முறை பாம்பே ஜெயஸ்ரீ பாடிய இந்தப் பாடலை எடுத்துக் கொள்வோம்.

பாடல் : எப்படி மனம் துணிந்ததோ? [Eppadi Manam Thuninthatho]
இயற்றியவர்: அருணாச்சலக் கவிராயர்
பாடியவர்: பாம்பே ஜெயஸ்ரீ
ராகம்: ஹுசைனி
இசைத்தொகுப்பு: அமிர்தம்

ராமனைப் பதினான்கு வருடம் காட்டிற்கு அனுப்ப தசரதன் முடிவு செய்துவிட, “நான் சென்று வருகிறேன்” என சீதையிடம் விடைபெற விழைகிறான் ராமன். அதற்கு சீதையின் பதிலாக வருகிறது இந்தப் பாடல்.
பாம்பே ஜெயஸ்ரீயின் குரலில் உணர்வுகளைக் குழைத்து வரும் பாடலைக் கேட்க இங்கே கிளிக்குங்கள்.
அமிர்தம் on ராகா.காம்.

பல்லவி:
எப்படி மனம் துணிந்ததோ? சுவாமி!
எப்படி மனம் துணிந்ததோ, சுவாமி?
வனம் போய் வருகிறேன் என்றால்
இதை ஏற்குமோ பூமி?
(எப்படி)
அனுபல்லவி:
எப்பிறப்பிலும் பிரியேன், விடேன் என்று கைதொட்டீரே..(2)
ஏழையான சீதையை நட்டாற்றில் விட்டீரே…(2)
சரணம்:
கரும்பு வில் முறித்தாற் போலே தள்ளாலாச்சுதோ?
ஒரு நாளும் பிரியேன் என்று சொன்ன சொல்லும் போச்சுதோ? (2)
வருந்தி வருந்தி தேவரீர் மெல்ல
வார்த்தையால் கொல்லாமல் கொல்ல (2)
இரும்பு மனது உண்டாச்சுதல்லவோ?
என்னை விட்டுப்
பிரிகிறேன் என்று சொல்ல….
(எப்படி மனம் துணிந்ததோ)

இளையராஜா, ஜென் தத்துவம் மற்றும் ஒரு காலிப் பாத்திரம்

ஜென் தத்துவக் கதைகள் அடங்கிய ஒரு PDF கோப்பைப் படித்துக் கொண்டிருந்தேன்.
ஒரே ஜென் கதையைப் பலவேறு வடிவங்களில் நீங்கள் படித்திருக்கக் கூடும். ஒவ்வொருவர் அந்தக் கதையைக் கூறும்போதும் ஏதாவது கொஞ்சம் திரிபு இருக்க வாய்ப்பிருக்கிறது.
அதில் ஒரு கதை இப்படிப் போகிறது.

ஒரு கல்லூரிப் பேராசிரியர் ஒரு ஜென் துறவியை சந்தித்துப் பேசுகிறார். ஜென் துறவி அவருக்கு ஒரு கோப்பையில் தேனீரை ஊற்றுகிறார். தேனீர் கோப்பையின் விளிம்பு வரை வந்துவிட்டது. துறவியோ நிறுத்தாமல் இன்னமும் ஊற்றியபடி இருக்கிறார்.
பேராசிரியர் பதட்டமாக “கோப்பை நிறைந்து இருக்கிறது. இதற்கு மேல் எவ்வளவு ஊற்றினாலும் அது தங்காது. வழிந்து வெளியேறிவிடும்.” என்கிறார்.
துறவி நிதானமாக “நீயும் இந்தக் கோப்பை போல தான் இருக்கிறாய்; முதலில் உன் கோப்பையைக் காலியாக்கு, அதற்குப் பின் நாம் ஜென் பற்றிப் பேசுவோம்” என்கிறார்.

இதைப் படித்துக் கொஞ்ச நேரத்தில், யதேச்சையாய், ராஜா சார், கல்கி இதழுக்கு, 1997-இல் கொடுத்த ஒரு பேட்டியின் PDF வடிவத்தைப் படிக்க நேர்ந்தது.
அதில் ராஜா சார் இந்தக் கதையின் சாரத்தையே குறிப்பிடுகிறார்.

இளையராஜாசினிமா என்பது ஒருவித ஃபார்முலாவாகப் பழகிப் போன விஷயம்.இதற்குத் தான் மக்கள் தலையாட்டுவார்கள்.
என்னிடம் கொண்டுவரப்படுகிற பாத்திரம் காலியாக இருந்தால் தானே நான் அதில் ஏதாவது போட முடியும்?
நீங்கள் கொண்டுவருகிற போதே, அதில் எதையாவது போட்டு நிரப்பித்தான் கொண்டுவருகிறீர்கள். அதற்கு மேலும் அதில் நான் எதைப் போட முடியும்?

முழுப் பேட்டியையும் படிக்கக் கீழே கிளிக்குங்கள்.
கல்கியில் வெளிவந்த இளையராஜாவின் பேட்டி – PDF வடிவில்.

சுஜாதா – வி மிஸ் யூ!

பாடப் புத்தகங்கள் தவிர்த்து, மற்ற புத்தகங்களை நான் படிக்க ஆரம்பித்த போது ஆறாவதோ ஏழாவதோ படித்துக் கொண்டிருந்தேன். ஆரம்ப காலத்தில் படித்தது முக்கால் வாசி கதைகளும் நாவல்களும்.

சுவாமிமலை அரசு நூலகத்தில் அப்போது நான் உறுப்பினராவதற்காய், தலைமையாசிரியரிடம் கையெழுத்து வாங்கி வந்தது ஞாபகம் இருக்கிறது.
அரசு நூலகத்தில் அதிகம் கிடைத்தது சிவசங்கரி, லக்ஷ்மி, ஜெயகாந்தன் மற்றும் தி.ஜானகிராமன்.
பட்டுக்கோட்டை பிரபாகர், ராஜேஷ் குமார், சுபா போன்றவர்களின் கிரைம் நாவல்கள் அங்கே கிடைக்காது. அதெல்லாம் தின வாடகைக்கு [ஒரு நாளைக்கு 25 காசு] செட்டியார் கடையில் வாங்கிப் படித்தது.

இப்படி ஏதோ ஒரு நாளில், எங்கேயோ என் கண்ணில் சிக்கியது ஒரு சுஜாதாவின் நாவல்.
கேட்டார்ப் பிணிக்கும் தகையவாய் கேளாரும்
வேட்ப மொழிவதாம் சொல்.

இது சொல்லுக்கு மட்டுமல்ல, நல்ல எழுத்துக்கும் அஃதே இலக்கணம்.
முதல் நாவலிலேயே படித்தவரை பிணைத்துவிடக் கூடிய எழுத்து.
மிக முக்கியமாகக் கவர்ந்தது, கதையைப் படிப்பவருடன் நேரடியாகப் பேசுவது போன்ற த்வனியில் எழுதும் சுஜாதாவின் நடை.
எடுத்த எடுப்பிலேயே “நீங்கள் குப்புசாமியோ, ராமசாமியோ, இப்ராஹிமோ, பீட்டரோ யாராக வேண்டுமானாலும் இருந்து கொள்ளுங்கள்” என்பது போல தொடங்குவார்.

அவரது எழுத்து நடை, படிப்பவர் ஒவ்வொருவருடனும் சொல்லப் படாத ஓர் அன்னியோன்னியத்தை தானாகவே உருவாக்கிக் கொள்கிறது. பல ஆண்டுகளுக்கு முன் அவர் எழுதிய கதைகளை இப்போது படித்தாலும் அது வெளிப்படுகிறது.

அதெல்லாம் சரி, இந்தப் பதிவு எழுத என்ன காரணம்?

சுஜாதாவைப் போல எழுதக் கூடியவர்கள் வரலாம். சுஜாதா போல, கற்றதும் பெற்றதும் தருவதற்கு இப்போதைக்கு யாரும் இல்லை.
நல்ல கவிதைகளை, ஹைக்கூக்களை, வெண்பாக்களை அவர் போல தெரிந்தெடுத்துப் பகிர்ந்து கொள்ள யாருமில்லை. ‘கற்றதும் பெற்றதுமி’ல் அவர் சுட்டிக்காட்டிய சில நல்ல கவிதைகளைக் கீழே பதிக்கிறேன். நீங்கள் படியுங்கள்.

கண்ணீரைப் படைத்தது
கடவுளின் தவறா
ஆனந்தப்பட்டு
அதை வடிக்காமல்
அழுது வடிக்கும்
மனிதனின் தவறா?
-நீலமணி

புறாக்கள் வளர்க்கும்
எதிர் வீட்டுக்காரர்
என்னிடமிருந்து பறிக்கிறார்
பூனை வளர்க்கும் சுதந்திரத்தை.
-நா.முத்துக்குமார்

சுஜாதா – வி மிஸ் யூ.

சுப்ரமணியபுரம் – ஒரு பார்வை [Subramaniapuram - A View]

Subramaniapuram Movie
நல்ல படம் இது – என்கிற செவி வழிச் செய்தி, படம் வந்த சில நாட்களிலேயே கிடைத்துவிட்டது. அதுதான் படத்திற்கான மொத்த விளம்பரமும் என்று நினைக்கிறேன்.
தற்போதெல்லாம் தமிழ் சினிமாவின் புதுமுக இயக்குனர்கள் பிரமிக்க வைக்கிறார்கள்.
“சித்திரம் பேசுதடி” -யில் மிஷ்கின், “பொல்லாதவன்” – வெற்றிமாறன், என மிரட்டிய இயக்குனர்களின் வரிசையில் தானும் இடம் பிடிக்கிறார் “சுப்ரமணியபுரம்” – சசிகுமார்.

பாதிக்கும் மேற்பட்டவர்கள் புதிய முகங்கள், படத்தின் எதார்த்தமான பின்னணிக்கு மிகவும் உதவுகிறார்கள். இயக்குனர் சசிகுமார், “பரமன்” என்கிற ஒரு கேரக்டராக இந்தப் படத்தில் வாழ்ந்துள்ளார்.
காட்சிகளின் பின்னணியில் தெரியும் அந்தக் காலத்திய சினிமா போஸ்டர், அந்தக் காலத்து ஃபோன் என 1980-களை நம் கண் முன் நிறுத்தும் நேர்த்தியான கலை அமைப்பு [Art Direction] பாராட்டுக்குரியது.

வசனங்களில், மதுரைத் தமிழுடன் எதார்த்தமும் பின்னிப் பிணைந்து காணப்படுகிறது.

இந்தப் படத்தின் “கண்கள் இரண்டால்” பாடல் மிக அருமை, அதுபற்றி ஏற்கெனவே எழுதி இருக்கிறேன். பின்னணியில் ரேடியோவில் ஒலிக்கும் “சிறு பொன் மணி அசையும்” பாடல், சரோஜ் நாராயணசுவாமி வாசிக்கும் செய்திகள் எனப் படத்தின் பின்னணி இசையிலும் கவனத்துடன் செயல் பட்டு இருக்கிறார் அறிமுக இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன்.

படத்தில் நடிப்பு என்று பிரித்து அறியும்படி எதுவும் தெரியாததால், நடித்தவர்களைப் பற்றி எதுவும் சொல்வதற்கில்லை.

மொத்தத்தில் சுப்ரமணியபுரம், எதார்த்தமான மனிதர்களைப் பற்றிய நல்லதொரு திரைப்படம் (சற்றே அதிகமான வன்முறைக் காட்சிகள் இருந்தாலும்).
கிறுக்கல்ஸ்.காம் மதிப்பெண் : 65%

சில சுட்டிகள்.

யுவன் இசையில் ராஜா பாடிய பாடல்கள்

யுவன்சங்கர் ராஜாவின் இசையில், ராஜா சார் சில அற்புதமான பாடல்களைப் பாடி இருக்கிறார்.
யுவன்சங்கர் ராஜாவிற்கு நன்றாய்த் தெரிந்திருக்கிறது, எந்த சிச்சுவேஷனுக்கு ராஜா சாரின் குரல் பொருத்தமாய் இருக்கும் என்று. வேறு யாருடைய இசையிலும், ராஜா சார் பாடியதாகத் தெரியவில்லை.

“எங்கெங்கோ கால்கள் செல்லும் பாதையில்” – நந்தா
“நம்ம காட்டுல மழ பெய்யுது” – பட்டியல்
“அறியாத வயசு, புரியாத மனசு” – பருத்திவீரன்
“பறவையே எங்கு இருக்கிறாய்?” – கற்றது தமிழ்

எல்லாப் பாடல்களையும் தனித் தனியாய் அலசலாம், ஆனால் இந்தப் பதிவில் நான் பேச விரும்புவது சமீபத்தில் எனது ஐஃபோனில் அதிகமாக கேட்கப்பட்ட பாடலில் சேர்ந்து கொண்ட, கவிஞர் நா.முத்துக்குமார் எழுதிய, “பறவையே எங்கு இருக்கிறாய்?” பாடல் பற்றி.

பறவையே எங்கு இருக்கிறாய்?
பறக்கவே என்னை அழைக்கிறாய்,
தடயங்கள் தேடி வருகிறேன் அங்கே…
பறவையே எங்கு இருக்கிறாய்?
பறக்கவே என்னை அழைக்கிறாய்,
தடயங்கள் தேடி வருகிறேன் அங்கே…

அடி என் பூமி தொடங்கும் இடம் எது? நீ தானே!!
அடி என் பாதை இருக்கும் இடம் எது? நீ தானே!!!
பார்க்கும் திசைகளெல்லாம் பாவை முகம் வருதே,
மீன்கள் கானலின் நீரில் தெரிவதுண்டோ?
கண்கள் பொய்கள் சொல்வதுண்டோ?

நீ போட்ட கடிதத்தின் வரிகள் கடலாக,
அதில் மிதந்தேனே பெண்ணே நானும் படகாக….
(பறவேயே…)

உன்னோடு நானும் போகின்ற பாதை
இது நீளாதோ தொடு வானம் போலவே!
கதை பேசிக் கொண்டே வா காற்றோடு போவோம்
உரையாடல் தீர்ந்தாலும் உன் மௌனங்கள் போதும்.
இந்த புல் பூண்டும் பறவை நாமும் போதாதா?
இனி பூலோகம் முழுதும் அழகாய்ப் போகாதா?

முதல் முறை வாழப் பிடிக்குதே!
முதல் முறை வெளிச்சம் பிறக்குதே!
முதல் முறை முறிந்த கிளையொன்று பூக்குதே…..!

முதல் முறை கதவு திறக்குதே!
முதல் முறை காற்று வருகுதே!
முதல் முறை கனவு பலிக்குதே அன்பே…..!

(பறவையே)

ஏழை…காதல்….
மலைகளில் தனில் தோன்றுகின்ற ஒரு நதியாமோ……
மண்ணில்..விழுந்தும் ஒரு காயமின்றி…
உடையாமல் உருண்டோடும் நதியாகிடுதோ….

இதோ இதோ இந்தப் பயணத்திலே
இது போதும் கண்மணி,
வேறென்ன நானும் கேட்பேன்?
பிரிந்தாலும் மனதிலே இந்த நொடியில் என்றும் வாழ்வேன்…!

இந்த நிகழ்காலம் இப்படியே தான் தொடராதா?…
என் தனியான பயணங்கள் இன்றுடன் முடியாதா?…

முதல் முறை வாழப் பிடிக்குதே!
முதல் முறை வெளிச்சம் பிறக்குதே!
முதல் முறை முறிந்த கிளையொன்று பூக்குதே…..!

முதல் முறை கதவு திறக்குதே!
முதல் முறை காற்று வருகுதே!
முதல் முறை கனவு பலிக்குதே அன்பே…..!

ராஜா சாரின் தன் குரலில் ஒவ்வொரு வரிக்குள்ளும் எத்தனை உணர்ச்சிகளை உள்ளடக்கி இருக்கிறார், அதுவும் அந்த “முதல் முறை” வரிகள் ஒவ்வொன்றும், எவ்வளவு மெருகுடன் வெளிவருகிறது பாருங்கள். Wow…What an awesome rendition!

முழுப்பாடலையும் கேட்க கீழே கிளிக்குங்கள்.
பறவையே எங்கு இருக்கிறாய்?

Audio clip: Adobe Flash Player (version 9 or above) is required to play this audio clip. Download the latest version here. You also need to have JavaScript enabled in your browser.

“நான் கடவுள்” – எப்போ ரிலீஸ்?

சமீப காலத்தில், நான் அதிகம் எதிர்பார்க்கும் ஒரு திரைப்படம் “நான் கடவுள்”.

இயக்குனர் பாலாவின் ரசிகன் என்பது மட்டுமல்ல காரணம், பின்னணி இசையில் தலைவர் ராஜா சார் என்னென்ன மாயங்கள் செய்திருப்பாரோ என்கிற ஆர்வமும் தான்.
எனக்குத் தெரிந்த வரை, படத்தில் ஒரே ஒரு பாடல் தான். அதுவும் கிட்டத்தட்ட 15 நிமிடங்களுக்கு. மற்றபடி, பின்னணி இசை சேர்க்கும்போது தலைவர் ஏதாச்சும் சேர்த்துவிடுவார் எப்படியும்.

சேது படம் வந்த போது சென்னையில் இருந்தேன். படத்தில் விக்ரம் நடிப்பைப் பாராட்டி, ஹிந்து பத்திரிக்கையில் வெளிவந்து இருந்தது. அதனால், அப்படி என்னதான் இருக்கிறது என்று பார்ப்பதற்காக, தேடிப் பிடித்து, எக்மோரில் ஒரு தியேட்டரில் போய்ப் பார்த்ததாய் ஞாபகம்.
இடைவேளையைக் கடந்து படம் ஓடிக்கொண்டு இருக்கிறது. பச்சை நிற உடையில், மன நோயாளிகள் நிறைந்த அந்த மடத்தினுள்ளே நம்மை நடத்திச் செல்லும் காமரா. அப்போது ஆரம்பிக்கும் தலைவர் குரலில் அந்தப் பாடல், “எங்கே செல்லும் இந்தப் பாதை..யாரோ யாரோ அறிவார்….”
நெஞ்சைப் பிசையும் பாடல்-னு சொல்லுவாங்களே, அந்த வகைல நம்பர் ஒன் அது.
எங்கே செல்லும் இந்தப் பாதை

Audio clip: Adobe Flash Player (version 9 or above) is required to play this audio clip. Download the latest version here. You also need to have JavaScript enabled in your browser.

அதே மாதிரி பிதாமகன் படத்தில், பின்னணி இசையில் சேர்க்கப்பட்ட பாடல் தான் “யாரது யாரது மனசத் திறந்தது..திறந்தது…” உருக்கிவிடும் கேட்பவரை. கேட்டுப் பாருங்கள்.
பிதாமகன் பின்னணி இசைப் பாடல்

Audio clip: Adobe Flash Player (version 9 or above) is required to play this audio clip. Download the latest version here. You also need to have JavaScript enabled in your browser.

இது போல ஏதாச்சும் ஒன்று கட்டாயம் இருக்கும் “நான் கடவுள்” ல. சரியா?