என்னவென்று சொல்வது · பிடித்த பாடல்

சமீப காலத்தில், நான் அதிகம் எதிர்பார்க்கும் ஒரு திரைப்படம் “நான் …

சமீப காலத்தில், நான் அதிகம் எதிர்பார்க்கும் ஒரு திரைப்படம் “நான் கடவுள்”.

இயக்குனர் பாலாவின் ரசிகன் என்பது மட்டுமல்ல காரணம், பின்னணி இசையில் தலைவர் ராஜா சார் என்னென்ன மாயங்கள் செய்திருப்பாரோ என்கிற ஆர்வமும் தான்.
எனக்குத் தெரிந்த வரை, படத்தில் ஒரே ஒரு பாடல் தான். அதுவும் கிட்டத்தட்ட 15 நிமிடங்களுக்கு. மற்றபடி, பின்னணி இசை சேர்க்கும்போது தலைவர் ஏதாச்சும் சேர்த்துவிடுவார் எப்படியும்.

சேது படம் வந்த போது சென்னையில் இருந்தேன். படத்தில் விக்ரம் நடிப்பைப் பாராட்டி, ஹிந்து பத்திரிக்கையில் வெளிவந்து இருந்தது. அதனால், அப்படி என்னதான் இருக்கிறது என்று பார்ப்பதற்காக, தேடிப் பிடித்து, எக்மோரில் ஒரு தியேட்டரில் போய்ப் பார்த்ததாய் ஞாபகம்.
இடைவேளையைக் கடந்து படம் ஓடிக்கொண்டு இருக்கிறது. பச்சை நிற உடையில், மன நோயாளிகள் நிறைந்த அந்த மடத்தினுள்ளே நம்மை நடத்திச் செல்லும் காமரா. அப்போது ஆரம்பிக்கும் தலைவர் குரலில் அந்தப் பாடல், “எங்கே செல்லும் இந்தப் பாதை..யாரோ யாரோ அறிவார்….”
நெஞ்சைப் பிசையும் பாடல்-னு சொல்லுவாங்களே, அந்த வகைல நம்பர் ஒன் அது.
எங்கே செல்லும் இந்தப் பாதை
[audio:enge-sellum.mp3]

அதே மாதிரி பிதாமகன் படத்தில், பின்னணி இசையில் சேர்க்கப்பட்ட பாடல் தான் “யாரது யாரது மனசத் திறந்தது..திறந்தது…” உருக்கிவிடும் கேட்பவரை. கேட்டுப் பாருங்கள்.
பிதாமகன் பின்னணி இசைப் பாடல்
[audio:yaarathu.mp3]

இது போல ஏதாச்சும் ஒன்று கட்டாயம் இருக்கும் “நான் கடவுள்” ல. சரியா?

பிடித்த பாடல்

கண்கள் இரண்டால் – சுப்ரமணியபுரம்

சமீபத்தில் அதிகம் பேசப்படும் படம் – சுப்ரமணியபுரம்.
பாடல் : கண்கள் இரண்டால்.
ஜேம்ஸ் வசந்தன், தொலைக்காட்சியில் நிகழ்ச்சித் தொகுப்பாளராய் இதுவரை அறிந்திருக்கிறோம். முதன் முதலாக இசையமைத்த படம்.
எனக்குப் பிடித்த பாடல் – என்கிற வகைப்பாட்டில் சேர்க்கும்போது ராஜா சாரின் பாடல் ஒன்று நினைவுக்கு வருகிறது.

“பாடல்கள் ஒரு கோடி, எதுவும் புதிதில்லை
ராகங்கள் கோடி கோடி அதுவும் புதிதில்லை”

பாடலை முழுக்க கேட்பதற்குள், ஏற்கெனவே கேட்ட பாடல் போல் தோன்றினால், உங்களுக்கு ஒரு சபாஷ்.
பின்வரும் பாடல்களில் ஏதாவது ஒன்றை முணுமுணுக்கத் தொடங்கிவிட்டால், உங்கள் காலரைத் தூக்கி விட்டுக் கொள்ளலாம்.
தலையைக் குனியும் தாமரையே – ஒரு ஓடை நதியாகிறது – இளையராஜா
சின்னக் கண்ணன் அழைக்கிறான் – கவிக்குயில் – இளையராஜா
அழகான ராட்சசியே – முதல்வன் – ஏ.ஆர்.ரகுமான்
சுடும் நிலவு சுடாத சூரியன் – தம்பி – வித்யாசாகர்

“இதுவா, இது ரீதிகௌளை” என்று சொல்லிவிட்டீர்களோ, உங்கள் முதுகில் நீங்களே ஒருமுறை தட்டிக் கொடுத்துக் கொள்ளலாம்.

பாடலைப் பார்க்க கீழே சொடுக்குங்கள்
Continue reading “கண்கள் இரண்டால் – சுப்ரமணியபுரம்”

பிடித்த பாடல்

தேடினேன் தேவ தேவா – அழைக்கிறான் மாதவன்

ஸ்ரீராகவேந்திரா – திரைப்படத்தில், இறுதிக் கட்டத்தில் வருகிறது இந்தப் பாடல்.
ஸ்ரீராகவேந்திரர் சமாதியடையும் தறுவாயில், அவர் பாடுவது போல் தொடங்கி, அவரது சீடர்கள் முடிப்பதுபோல் உள்ள பாடல்.

பாடலைத் தனியாக ஒரு முறை கேளுங்கள். பிறகு படத்துடன் பாருங்கள். பாட்டு முதலில் உருவாக்கப் பட்டதா, இல்லை காட்சிகளைப் பார்த்துவிட்டு, பின்னணி இசை சேர்க்கும்போது ராஜா சார் சேர்த்துவிட்ட பாடலா எனக் குழம்பும் அளவுக்கு, காட்சியுடன் ஒன்றிய ஒரு பாடல்.

முதலில், சமாதி நிலையை அடைவதற்கு முன்னர், ஸ்ரீராகவேந்திரரே பாடுவது போலத் தொடங்குகிறது பாடல். அவர் கண்களில், நீல வண்ணக் கண்ணன் குழலோடு தோன்றி, அவரை “வா” என அழைக்கும் காட்சி தெரிகிறது. மாசில்லாத தூயனுடன் கலக்கும் ஆவல், அவர் குரலில் வெளிப்பட, மென்மையாகப் பாடலைத் தொடங்க “கே.ஜே.யேசுதாஸ்”ஐத் தேர்ந்தெடுக்கிறார் ராஜா சார்.

கண்ணனின் குழலோசைக்குப் பிறகு பாடல் தொடங்குகிறது.

அழைக்கிறான் மாதவன்…ஆநிரை மேய்த்தவன்…
மணிமுடியும் மயிலறகும்
எதிர்வரவும் துதிபுரிந்தேன்…
மாதவா…
கேசவா…
ஸ்ரீதரா…
ஓம்…

இப்போது தான் பாடலில் தாள இசை சேர்கிறது.
அதுவும் சீரான, சற்றே அதிக இடைவெளியில், இறுதிக் கட்டத்தை நெருங்கிவிட்ட ஒரு வாழ்வைக் குறிப்பால் சொல்லும் ஒரு தாளம்.

தேடினேன் தேவ தேவா…தாமரைப் பாதமே…
வாடினேன் வாசு தேவா…வந்தது நேரமே…
ஞான வாசல் நாடினேன்.
வேத கானம் பாடினேன்
கால காலம் நான் உனைத்
தேடினேன் தேவ தேவா…தாமரைப் பாதமே…

காதில் நான் கேட்டது…வேணு கானாமிருதம்…

வேணு கானம் – என்றாலே குழலிசை தானே, அதுதான் ராஜா சார் அங்கே ஒரு சின்னத் துளியாக மெல்லிய குழலோசையை வைத்து இருக்கிறாரோ?

கண்ணில் நான் கண்டது…கண்ணன் பிருந்தாவனம்
மாயனே!
நேயனே!
மாசில்லாத தூயனே..
ஆத்ம ஞானம் அடைந்த பின்னும்
தேடினேன் தேவ தேவா…தாமரைப் பாதமே

இதற்குப் பிறகு ஸ்ரீராகவேந்திரர் இறைவனுடன் ஒன்ற, அவரது சீடர்கள் பாடுவதாகப் பாடல் தொடர்கிறது.
இறைவனுக்கும் பக்தனுக்கும் இருந்த மெல்லிய உறவைச் சொல்லிக் கொண்டு வந்த பாடல், இப்போது சீடர்களுக்கும் குருவிற்கும் இடையேயான பந்தத்தைச் சொல்ல ஆரம்பிக்கிறது.
முதலில் அவர் அருகில் இருக்கும் சீடர்கள் பாடுகிறார்கள். இதற்கு கணிரென்ற குரலுடைய “டி.எல்.மஹாராஜன்”ஐத் தேர்ந்தெடுக்கிறார் ராஜா சார்.

குருவே சரணம்….
குருவே சரணம்…
ராகவேந்திரா ஸ்ரீராகவேந்திரா…
ராகவேந்திரா ஸ்ரீராகவேந்திரா…
ராகவேந்திர ராகவேந்திர ராகவேந்திர ராகவேந்திர…
குருவே சரணம்….
குருவே சரணம்…

இதற்கிடையில், மற்றொரு சீடர் [படத்தில் டெல்லி கணேஷ்], முக்தி நிலை அடைவதற்குள் தன் குருவைத் தரிசிக்க வந்து கொண்டிருக்கிறார். அவருக்குப் பாதையில் சில தடங்கல்கள் நேர்கிறது. அதையெல்லாம் தாண்டி எப்படியாவது குருவைத் தரிசிக்க வேண்டுமே என்கிற பதட்டத்துடன் இருக்கிற இந்த சீடரின் உணர்வைச் சொல்ல ஆரம்பிக்கிறது பாடல்.

ராஜா சார் எத்தனையோ திரைப்படக் காட்சிகளுக்குப் பின்னணி இசை சேர்த்துக் காட்சியில் கதா பாத்திரங்களின் உணர்வை நமக்கு வெளிப்படுத்தி இருக்கிறார். அது அவருக்கு சர்வ சாதாரணம்.
ஆனால் ஒரே பாடலில் இப்படிப் பல உணர்வுகளைக் காட்டுவது சற்று கடினம் தானே.
யேசுதாஸில் தொடங்கி, டி.எல்.மஹாராஜன் பாடும் போதே பாடல் சற்றே உயர்ந்த ஸ்தாயிக்குச் சென்று இருக்கிறது.
இப்போது அது இன்னும் உச்ச ஸ்தாயிக்கு எடுத்து செல்ல வேண்டும்.
இந்த சீடர் குரலாய் ஒலிக்க வேறொருப் பாடகரும் வேண்டும்.
இதற்கு ராஜா சார் தேர்ந்தெடுப்பது “மலேசியா வாசுதேவன்”.

ஞானத் திருமேனி காண வர வேண்டுமே…
சீதப்பூ வண்ணப் பாதம் தொழ வேண்டுமே…
பக்தன் வரும்போது பாதை தடையானதே…
காட்டுப் பெருவெள்ளம் ஆற்றில் உருவானதே…
தாயாகி தயை செய்யும் தேவா…
தடை நீங்க அருள் செய்ய வா வா…
நான் செய்த பாவம் யார் தீர்க்கக் கூடும்…
நீ வாழும் இடம் வந்து நான் சேர வேண்டும்…

காட்சிகள் மாறி, திரும்பவும் ஸ்ரீராகவேந்திரர் இருக்கும் இடத்துக்கு வருகிறோம். சீடர்கள் உச்ச ஸ்தாயியில் தங்கள் குருவின் பெயரை மந்திரம் போல உச்சரிக்கிறார்கள்.

குருவே சரணம்….
குருவே சரணம்…
ராகவேந்திரா ஸ்ரீராகவேந்திரா…
ராகவேந்திரா ஸ்ரீராகவேந்திரா…
ராகவேந்திர ராகவேந்திர ராகவேந்திர ராகவேந்திர…
குருவே சரணம்….
குருவே சரணம்…
ராகவேந்திர ராகவேந்திர ராகவா
குரு ராகவேந்திர ராகவேந்திர ராகவா…

உணர்வுகளை இசையில் கொண்டுவருவதில் ராஜா ராஜா தான். என்ன சொல்கிறீர்கள்?
பாடலைக் கேட்க கீழே க்ளிக்குங்கள்..
[audio:SriRaghavendra-Thedineindevadeva.mp3]

படத்துடன் பார்க்க கீழே க்ளிக்குங்கள்…
YouTube – தளத்தில் ஏற்றிய செந்திலுக்கு நன்றி.
Continue reading “தேடினேன் தேவ தேவா – அழைக்கிறான் மாதவன்”

பிடித்த பாடல்

ராஜா-வின் முதல் பாடல்

ராஜா-ன்னு இந்த தளத்தில் எப்போ சொன்னாலும், அது இசைஞானியைத் தான் குறிக்கும்.

ராஜா சார் முதல் முதல்ல கம்போஸ் பண்ணின பாடல் எது? உங்களுக்குத் தெரியுமா?
அன்னக்கிளி படத்தில இருந்து “மச்சானைப் பார்த்தீகளா?” ன்னு சொல்றீங்க, அதானே?
🙂

அதான் இல்லை.

என்ன பாட்டுன்னு கவிஞர் கண்ணதாசன் நினைவா நடந்த நிகழ்ச்சியில அவரே சொல்லி இருக்கார்.
அப்போ இந்தியாவின் பிரதமரா இருந்த “ஜவஹர்லால் நேரு” இறந்து விட்ட சமயம்.
அவருக்கு இரங்கல் தெரிவிக்கும் வகையில் கண்ணதாசன் பாடல் எழுதி இருக்கிறார்.

சீறிய நெற்றி எங்கே
சிவந்த நல்லிதழ்கள் எங்கே
கூரிய விழிகள் எங்கே
குறுநகை தான் போனதெங்கே
நேரிய பார்வை எங்கே
நிமிர்ந்த நன்னடைதான் எங்கே
நிலமெலாம் வணங்கும் தோற்றம்
நெருப்பினில் வீழ்ந்ததிங்கே..

இந்த பாட்டுக்குத் தான் ராஜா சார், முதல் முதலா இசை அமைச்சிருக்கார்.
பாடலைக் கேட்கணும்-னு உங்களுக்கும் ஆர்வமாய் இருக்குமே? கீழே கிளிக்குங்கள்.

[audio:ir-first-song.mp3]
பிடித்த பாடல்

நமக்கு எத்தனையோ பாடல்களைப் பிடிக்கிறது. பாட்டோட கருத்தோ, இசையோ, குரலோ …

நமக்கு எத்தனையோ பாடல்களைப் பிடிக்கிறது. பாட்டோட கருத்தோ, இசையோ, குரலோ அல்லது இது எல்லாம் சேர்ந்த ஒரு விஷயமோ நம்மை ஈர்க்கிறது.

சில பாடல்கள், அதை நாம் எந்த பொழுதில் கேட்டாலும், நம் வாழ்க்கையில் நடந்த நிகழ்ச்சிகளையோ, சந்தித்த மனிதர்களையோ நினைவு படுத்திச் செல்லும்.

நானும் எனது அண்ணனும், திண்டுக்கலில் ஆரியபவனில் டின்னர் சாப்பிட்டுக்கொண்டிருந்தோம். 1993 அல்லது 1994ஆம் வருடம்.

அப்பொழுதுதான் முதன்முறை இந்தப் பாடலைக் கேட்டோம். கேட்டவுடனே மனதை மயக்கும் ஒரு தெய்வீகத் தன்மை அதில் இருந்தது. இது சினிமாப் பாடல் என நினைக்கவே இல்லை. பாம்பே ஜெயஸ்ரீயின் ஏதோ ஓர் ஆல்பம் என்று தான் நினைத்து இருந்தோம். அங்கே உள்ள சர்வரைக் கேட்டுத்தான் தெரிந்து கொண்டோம் இது “வியட்னாம் காலனி” படப் பாடல் என்பதை.

அப்போதும் எங்களுக்குத் தெரியாது, இது தலைவரின் (இளையராஜா) மற்றுமொரு படைப்பு என்று.

என்ன ஒரு குழைவு. என்ன ஒரு பிர்க்கா… மேடு பள்ளங்களில் ஏறி இறங்கி செல்லும் ஒரு நதியின் லாவகம்.
அதில் ஒரு வரி. அதை எழுத்தில் சொன்னால்,
“உன் கோயில் எங்கும் நாதஸ்வரங்கள் கேட்கும்” என்று எழுதலாம், ஆனால் அது முழுமையாகச் சொல்வதாகாது.
பாடலைக் கேட்டால் உங்களுக்கே புரியும்.
[audio:http://kirukkals.com/wp-content/uploads/2007/05/kaiveenaiyai-yendhum-viyatnamcolony.mp3%5D

பிடித்த பாடல்

சமீபத்தில் ரசித்த பாடல்கள்

“ஏம்பா லேட்டஸ்ட்டா எத்தனையோ பாட்டு வந்துகிட்டு இருக்கே, அதுல உனக்கு பிடிச்ச பாட்டு பத்தி எழுதலாமுல்ல ?”
என்று நேரிலும், தொலைபேசியிலும், மின்னஞ்சலிலும் கேட்ட பல பேருக்காக என்றெல்லாம் ஜல்லியடிக்காமல், லிஸ்ட்டுக்குப் போயிடுறேன்.

பாடல் – குரல் – இசை – படம் என்ற வரிசையில் படிக்கவும்.

1. காற்றின் மொழி – பலராம் – வித்யாசாகர் – மொழி.
2. சஹானா தூரல் – உதித் நாராயண், சின்மயி. – ஏ.ஆர்.ரகுமான் – சிவாஜி
3. ஆசப் பட்ட எல்லாத்தையும் – ஹரிஹரன் – தேவா – வியாபாரி
4. கொஞ்சம் கொஞ்சம் – கார்த்திக் – தலைவர் இளையராஜா – மாயக்கண்ணாடி
5. பொறந்திருச்சி காலம் – டி.கே.கலா, சைந்தவி – வித்யாசாகர் – சிவப்பதிகாரம்.

இன்னும் சொல்வேன்.

கவிதை · பிடித்த பாடல்

அதிகமாய் வெளியே தெரியாமல், புகழ் பெறாமல் போவதுண்டு. அது போன்ற …

அதிகமாய் வெளியே தெரியாமல், புகழ் பெறாமல் போவதுண்டு. அது போன்ற பாடல்களை அவ்வப்போது இங்கே தரலாம் என்று இருக்கிறேன்.

இன்று நான் எடுத்துக் கொண்டது, “நதி எங்கே வளையும்” என்னும் ஒரு தத்துவப் பாடல். கோபால் என்கிற பாடகரின் குரலில், வித்யாசாகர் இசையில் உயிரோடு உயிராக என்கிற அஜித் நடித்த ஒரு படத்தின் பாடல்.

வைரமுத்துவின் வரிகள், கேட்பவரை சிந்திக்க வைப்பதுடன், தன்னம்பிக்கை ஊட்டுவதாகவும் இருப்பதை உணர்வீர்கள்.

பாடலைக் கேட்க கீழே கிளிக்குங்கள்.
[audio:http://kirukkals.com/wp-content/uploads/2007/05/nathiyengge.mp3%5D

பாடல் வரிகளைப் பாருங்கள்.

நதி எங்கே வளையும், கரை ரெண்டும் அறியும்.
மதி எங்கே அலையும், ஆகாயம் அறியும்
விதி எங்கே விளையும், அது யாருக்குத் தெரியும் ?

அதை அறிந்து சொல்லவும் மதியில்லை
மதி இருந்தால் அதன் பேர் விதி இல்லை..

[நதி எங்கே]

விரும்பி யாரும் பிறப்பதுமில்லை
விரும்பிய பாத்திரம் கிடைப்பதுமில்லை..
புளிக்கும் வாழ்க்கை அமைந்ததை எண்ணி
சலிக்கும் மனதில் சந்தோஷமில்லை…

எட்டு நாள் வாழும் பட்டாம்பூச்சி
இறப்பைப் பற்றி நினைப்பதுமில்லை.
அறுபது வயது ஆயுள் கொண்டவன்
இருபது நிமிடமும் வாழவும் இல்லை…

கோரஸ்:
நாளை என்பதை விதியிடம் கொடுத்து
இன்று என்பதை எடுத்து நடத்து
கண்ணீர்த் துளியைக் கழற்றி எடுத்து
புன்னகை அணிந்து போரை நடத்து….

புன்னகை அணிந்து போரை நடத்து….

கனவு காண்பது கண்களின் உரிமை.
கனவு களைப்பது காலத்தின் உரிமை.
சிதைந்த கனவை சேர்த்து சேர்த்து
அரண்மனை கட்டுதல் அவரவர் திறமை.

ஒவ்வொரு நொடியிலும் உன்னதம் காண்பது
உலகில் பிறந்த உயிர்களின் உரிமை.
நிறைந்த வாழ்வு நேராதிருந்தால்
வந்ததில் நிறைவது வாழ்வின் கடமை..

கோரஸ்:
நாளை என்பதை விதியிடம் கொடுத்து
இன்று என்பதை எடுத்து நடத்து
கண்ணீர்த் துளியைக் கழற்றி எடுத்து
புன்னகை அணிந்து போரை நடத்து….

புன்னகை அணிந்து போரை நடத்து….

பிடித்த பாடல்

காற்றில் வரும் கீதமே…

ஒரு புதிய plugin உதவியுடன், பாடல்களை நேரடியாக இந்த தளத்தில் இருந்தே கேட்க வகை செய்தேன்.
அதை டெஸ்ட் செய்து பார்க்க இந்த பாடலை வலையேற்றினேன்….

சென்ற வருடத்தின் மிகச் சிறந்த பாடல்களில் ஒன்று.

பாடல் : காற்றில் வரும் கீதமே…என் கண்ணனை அறிவாயோ…
இசை : தலைவர் இளையராஜா
பாடியவர்கள் : ஷ்ரேயா கோஷல், பவதாரிணி, ஹரிஹரனுடன் தலைவரும்.

என்ன ஒரு அற்புதமான பாடல்…கல்யாணி ராகத்தின் சாயலில் இருப்பதாக தெரிந்தவர்கள் சொன்னார்கள்.
ஒரு இசைக் குடும்பத்தைக் கண்ணில் நிறுத்த வேண்டிய காட்சியமைப்பு….

இந்த பாடலின் ராகத்தில், தாராளமாக எந்த கடவுளுக்கும் பாடல் எழுதிப் பாடலாம்…அப்படி ஒரு தெய்வாம்சம் இதில் உணர்கிறேன்…

நீங்களும் கேட்க, கீழே க்ளிக்குங்களேன்…

[audio:Hariharan-SGoshal-Bhava-Katril-Varum.mp3]
பிடித்த பாடல்

2005 – சில நினைவுகள் – பகுதி 1

இதோ வந்துவிட்டது 2006.

அதே போல இந்த வருடத்தை நினைவு கூர்வதற்கும் இது சரியான நேரம் தானே ?

இந்த வருடத்தில் என் மனம் கவர்ந்த 5 பாடல்களைப் பற்றி இப்போது பேசுவோம். பிடித்த மற்றவை பற்றி அடுத்த பதிவில்.

5. ஐயங்காரு வீட்டு அழகே
படம்: அன்னியன்
பாடியவர்கள்: ஹரிஹரன், ஹரிணி
இசை: ஹாரிஸ் ஜெயராஜ்

கேளுங்களேன்

4.மயிலிறகே மயிலறகே

படம்: அன்பே ஆருயிரே
பாடியவர்கள்: மதுஷ்ரி, நரேஷ் ஐயர்
இசை: A.R.ரெஹ்மான்

கேளுங்களேன்

3.காற்றில் வரும் கீதமே

படம் : ஒரு நாள் ஒரு கனவு.
பாடியவர்கள் : ஹரிஹரன், இளையராஜா, பவதாரிணி, ஷ்ரேயா கோஷல், சாதனா சர்கம்.
இசை: எங்கள் தலைவரன்றி வேறு யார் ?

கேளுங்களேன்

2.உயிரே என் உயிரே

படம் : தொட்டி ஜெயா
இசை: ஹாரிஸ் ஜெயராஜ்
பாடியவர்கள் : கார்த்திக், அனுராதா ஸ்ரிராம், பாம்பே ஜெயஷ்ரி
கேளுங்களேன்

1.ஒரு மாலை இள வெயில் நேரம்…
படம் : கஜினி
பாடியவர்கள் : கார்த்திக்
இசை: ஹாரிஸ் ஜெயராஜ்
கேளுங்களேன்

உங்களது டாப் 5 பாடல்களைப் பற்றி மறுமொழியுங்களேன்.

மேலும் தொடர்வோம்.

பிடித்த பாடல்

வானத்தின் மேல் நின்று

(குமாரின் பயணம் தொடர்கிறது..)

குமாரின் கார் பயணங்கள், மிக மிக வித்யாசமானவை…

ஒரு மணி நேரப் பயணம், ஆபிசில் இருந்து வீட்டுக்கு…
இது அவனுக்கே அவனுக்கான நேரம்…

அவன் மூச்சுக் காற்றும், இசையும் மட்டுமே நிறைந்திருக்கும் தருணங்கள்..
சில பாடல்களைக் கேட்ட உடன் பழைய நினைவுகள், மண்டைக்குள் சுரக்கும்.
சில பாடல்கள் மகிழ வைக்கும்,
சில அவனை நெகிழ வைக்கும்,
சில அவன் மூளையைத் துளைக்கும், (இது என்ன ராகமோ என்று)
மற்றும் சிலவோ அவன் இதயத்தை.

சமீபத்தில் ஒரு நாளில் அடிக்கடி Rewind ஆன பாடல் இது !

வானத்தின் மேல் நின்று பூமியை நீ பாரு…
மண்ணோடு பேதங்கள் இல்லை
காதலில் பேதங்கள்- காட்சியில் பேதங்கள்
மனிதன் தான் செய்கின்ற தொல்லை

அட அட, என்ன ஒரு கூர்மையான எழுத்து !

ஒரு விஷயத்தைக் கொஞ்சம் தள்ளி நின்று பார்க்கும்பொழுது, அதன் உண்மை வடிவங்கள் புலப்படும்..
எத்தனை எத்தனை பேதங்கள்…எல்லாம் யார் செய்தது ? மனிதன் தானே ?

நான்கு வரிகளில் மிக அழகாய் எழுதி இருக்கிறார்… (வைரமுத்து தானே ?)

இன்னும் இந்த பாடலின் ஒவ்வொரு வரியும் ரசிக்க, சிந்திக்க வைக்க கூடியது.
கேட்டுப் பாருங்கள்.

படம் : அமராவதி
பாடியவர் : அசோக்
இசை : பால பாரதி (ஆமா..இவர் என்ன ஆனார்….ஏதோ சொந்த ஊருக்கு போய் செட்டில் ஆகிட்டார்னு கேள்விப்பட்டேன். தெரியவில்லை. இதே படத்தின் ‘தாஜ் மஹால் தேவையில்லை’ பாடலுக்காக ராஜா சாரின் பாரட்டைப் பெற்றவர் இவர்…ஹும்ம்ம்)

Listen to the song here.
[audio:udal_enna.mp3]

உடலென்ன உயிரென்ன
உறவென்ன உலகென்ன
விதியென்ன விடையென்ன மனமே

ஓடும் நதியெல்லாம் கடலோடு
உடல் எல்லாம் மண்ணோடு
உயிர் போகும் இடமெங்கே மனமே

இந்த வாழ்க்கை வாடிக்கை
வெறும் வாண வேடிக்கை
இன்பம் தேடி வாடும் ஜீவனெல்லாம்
தவிக்குது துடிக்குது !

சரணம் – 1

காதலைப் பாடாமல் காவியம் இங்கில்லை…
ஆனாலும் காதல் தான் பாவம்…
ஜாதியும் தான் கண்டு ஜாதகம் கண்டானே
யாரோடு அவனுக்குக் கோபம்….

இது சாமி கோபமோ-இல்லை பூமி சாபமோ
ராஜாக்கள் கதை எல்லாம் ரத்தத்தின் வரலாறு
ரோஜாக்கள் கதை எல்லாம் கண்ணீரின் வரலாறு

உறவுக்கும் உரிமைக்கும் யுத்தம்—ஓ…
உலகத்தில் அது தானே சட்டம்..

சரணம் – 2
வானத்தின் மேல் நின்று பூமியை நீ பாரு…
மண்ணோடு பேதங்கள் இல்லை
காதலில் பேதங்கள்- காட்சியில் பேதங்கள்
மனிதன் தான் செய்கின்ற தொல்லை

இது பூவின் தோட்டமா – இல்லை முள்ளின் கூட்டமா…

முன்னோர்கள் சொன்னார்கள் அது ஒன்றும் பொய்யல்ல..
மரணத்தைப் போல் இங்கு வேறேதும் மெய்யல்ல..

நான் போகும் வழி கண்டு சொல்ல – ஓ…
நான் ஒன்றும் சித்தார்த்தன் அல்ல..