பிடித்த பாடல்

சர சர சாரக் காத்து…sara sara saara kaathu

சமீபத்தில் வரப்போகும் ‘வாகை சூட வா” திரைப்படத்திற்காக, வைரமுத்துவின் வரிகள், அறிமுக இசையமைப்பாளர் எம்.கிப்ரனின் இசையில், சின்மயியின் இனிய குரலில் வந்திருக்கும் சிறப்பான பாடல்.

கதாநாயகியிடம் இருக்கும் ஒரு குறும்பு மற்றும் காதலை, கிராமிய மணத்துடன் வெளிக்கொணர்ந்த வைரமுத்துவின் வரிகள் சிறப்பானவை. இந்தப் பாடல் குறித்து சின்மயி அவரது வலைப்பூவில் குறிப்பிட்டுள்ளார். இணையத்தில் பல இடங்களில் இதன் தங்கிலீஷ் லிரிக்ஸ் காணப்பட்டது. அதைத் தமிழில் கொடுக்கலாம் என்ற ஆர்வத்தில் இந்தப் பதிவை எழுதுகிறேன். ஆனாலும் சில வார்த்தைகள் சரியாகப் புரியவில்லை. தெரிந்தவர்கள் கமெண்டுங்கள்.

சர சர சாரக் காத்து வீசும்போது
சாரப் பாத்து பேசும்போது
சாரப் பாம்பு போல நெஞ்சு சத்தம் போடுதே…(2)

இத்து…இத்து இத்துப் போன நெஞ்சைத் தைக்க
ஒத்தப் பார்வ பாத்துச் செல்லு
மொத்த சொத்தும் எழுதித் தாரேன்
மூச்சு உட்பட…(2)

டீ…. போல நீ என்னை ஏன் ஆத்துறே…
(சர சர)
எங்க ஊரு பிடிக்குதா…எங்க தண்ணி இனிக்குதா
சுத்தி வரும் காத்துல…சுட்ட ஈரல் மணக்குதா
முட்ட கோழி பிடிக்கவா? முறைப்படி சமைக்கவா?
எலும்புகள் கடிக்கையில் என்னைக் கொஞ்சம் நினைக்கவா?

கம்பஞ்சோறு ருசிக்க வா…சமைச்ச கைய கொஞ்சம் ரசிக்க வா
மொடைக்கத்தான் ரசம் வச்சி மடக்கத்தான் பாக்குறேன்
ரெட்டை தோச சுட்டு வச்சி காவ காக்குறேன்..
முக்கண்ணு நுங்கு நான் விக்குறேன்
மண்டு நீ கங்கே(kangu) ஏன் கேக்குறே?

(சர சர)
புல்லுக்கட்டு வாசமா புத்திக்குள்ளே வீசுற
மாட்டு மணி சத்தமா மனசுக்குள் கேக்குற
கட்ட வண்டி ஓட்டுறே கையளவு மனசுலே
கையெழுத்துப் போடுற கன்னிப் பொண்ணு மார்புல

மூனு நாளாப் பாக்கல…ஊரில் எந்தப் பூவும் பூக்கல
ஆட்டுக்கல்லு குழியில உறங்கிப்போவும் பூனைய்யா…
வந்து வந்து பாத்து தான் கிறங்கிப் போறேன்யா…

மீனுக்கு ஏங்குற கொக்கு நீ…
கொத்தவே தெரியல மக்கு நீ…
(சர சர)

காட்டு மல்லிகை பூத்திருக்குது காதலா காதலா
வந்து வந்து ஓடிப்போகும் வண்டுக்கென்ன காச்சலா…

விருத்தம்

சமீபத்தில் விருத்தங்கள் மீது ஒரு தனிப்பட்ட ஆர்வம் ஏற்பட்டதில், சில …

kulir-mazhai-kaakaசமீபத்தில் விருத்தங்கள் மீது ஒரு தனிப்பட்ட ஆர்வம் ஏற்பட்டதில், சில தேடல்களைத் தொடர்ந்தேன்.
அப்போது தான், ரஞ்சனி காயத்ரி பாடிய “குளிர் மழை காக்க” என்கிற இந்த விருத்தம் காதில் பட்டது.
நீங்களும் கேட்டு ரசியுங்கள்.
[haiku url=”/wp-content/uploads/2010/10/kulir-mazhai-kaatha.mp3″ title=”குளிர் மழை காக்க”]

குளிர் மழை காக்கக் குடை பிடித்த கிரிதாரி
துளிரிடை த்ரௌபதி துகில் நீட்டிய உபகாரி
பிளிறு கேட்டோடி களிறு மீட்ட சக்ரதாரி
வளர்த்தென்னை இங்கு பரிபாலி….

பொருள்:
ஓரளவுக்கு எளிமையான பாடல் தான்.
குளிர் மழையில் இருந்து மக்களைக் காப்பதற்காக, கோவர்த்தன மலையைக் கைகளில் தூக்கி நிறுத்தியவனே,
த்ரௌபதியின் மானம் காக்க, ஆடை கொடுத்து உதவியனே,
முதலையிடம் மாட்டிக் கொண்டு பிளிறிய ஆண்யானையின் குரலைக் கேட்டு ஓடிப் போய் காப்பாற்றியவனே
என்னையும் வளர்த்து அருள்செய்.

தமிழ் உச்சரிப்புக்காகவே ரஞ்சனி காயத்ரியைப் பாராட்டலாம். கேட்டு மகிழுங்கள்.

நன்றி:
ஜீவா வெங்கட்ராமனின் பதிவு, இதே பாடலைப் பற்றி
rasikas.org
bollywood-mp3.com

விருத்தம்

சமீபத்திய என் கர்நாடக இசைத் தேடலில் ரஞ்சனி & காயத்ரி …

ரஞ்சனி காயத்ரிசமீபத்திய என் கர்நாடக இசைத் தேடலில் ரஞ்சனி & காயத்ரி சகோதரிகள் பாடிய சில விருத்தங்கள் என் காதில் பட்டது.
கேட்ட பிறகு இந்தப் பாடலை எழுதியது யார் என்று தேடி, இது கம்ப ராமாயணத்தில் இருந்து வருவது என் கண்ணில் பட்டது (நன்றி: R. பிரபு).
நான் கண்டதையும் கேட்டதையும் எழுதத் தானே இந்த கிறுக்கல்கள் தளமே!

நாடியபொருள் கைகூடும் ஞானமும் புகழும் உண்டாம்
வீடியல் வழியதாகும் வேரியங்கமலை நோக்கும்
நீடிய அரக்கர் சேனை நீறுபட்டழிய வாகை
சூடிய சிலையிராமன் தோள்வலி கூறுவோர்க்கே

காணொளி இங்கே.

சுருக் அர்த்தம் என்னவென்றால்,
பல அரக்கர்களின் சேனையை அழித்து சாம்பலாக்கி, வெற்றி வாகை சூடிய ராமனின் தோளின் வலிமையைப் பாடுபவர்க்கு, நினைத்த பொருள் கிடைக்கும், ஞானம், புகழ் உண்டாகும். அவரது வீடு நன்றாக இருக்கும். லக்ஷ்மியின் அருள் பார்வை கிடைக்கும்.
கமலை – லக்ஷ்மியை
வாகை – என்பது ஒரு மலர், வெற்றி பெற்றவர்களின் தோள்களில் மாலையாவது.
நீறு – சாம்பல்.

ரஞ்சனி காயத்ரி சகோதரிகள், ராகத்தையும் பாவத்தையும் தமிழ் உச்சரிப்பையும் சிதைக்காமல் பாடுவது நம் காதுகள் செய்த புண்ணியம்.
இந்த விருத்தத்தில் சிறிது நேரம் சஞ்சாரித்துவிட்டு, அடுத்த விருத்தத்தைத் தொடங்குகிறார்கள்.

நன்மையும் செல்வமும் நாளும் நல்குமே
திண்மையும் பாவமும் சிதைந்து தேயுமே
ஜென்மமும் மரணமும் இன்றித் தீருமே
இன்மையே ராம என்ற இரண்டெழுத்தினால்…

பெரிய விளக்கம் எதுவும் தேவையில்லை. மிக எளிமையான வரிகள். இதுவும் கம்ப ராமாயணத்தில் இருந்து வருகிறது.
“ராமா” என்ற இரண்டெழுத்தை மட்டும் இவர்கள் பாடுவதைக் கேளுங்கள்.
[haiku url=”https://kirukkals.com/wp-content/uploads/2010/09/ViruthamFollowedByRamaNamame.mp3″ title=”ரஞ்சனி காயத்ரி விருத்தம் – ராம நாமமே”]

பிடித்த பாடல்

சமீபத்தில் சாருகேசி ராகத்தைப் பற்றி இணையத்தில் துழாவிக் கொண்டிருந்த போது, …

aayiram-aayiram-gopiyargaloduசமீபத்தில் சாருகேசி ராகத்தைப் பற்றி இணையத்தில் துழாவிக் கொண்டிருந்த போது, இந்தப் பாடல் என் கண்ணில் பட்டது.
பாம்பே ஜெயஸ்ரீயின் ரசிகன் ஆனதால் அவர் பாடிய இந்தப் பாடலைப் பதிவிறக்கம் செய்து கேட்டேன்.
மிக அருமையான பாடல். சமீபத்தில் அடிக்கடி கேட்டுக் கொண்டிருக்கிறேன்.

எழுதியவர்: திரு.எம்.கே.தண்டபாணி பிள்ளை
முதலில் பாடிப் பிரபலமாக்கியது: எம்.எல்.வசந்தகுமாரி
ராகம்: சாருகேசி
தாளம்: ஆதி

ஆயிரம் ஆயிரம் கோபியர்களோடு நடம்
ஆடி விளையாடி வரும் ஆனந்த கிருஷ்ணன்..(அவன்)

நேயமோடு என்னை அவன் நாடி வந்து நின்றிடுவான்
நீல வர்ணக் கண்ணன் அவன் கோலக் குழல் ஊதி நின்றான்…(ஆயிரம்…)

கொஞ்சும் சலங்கை ஒலிக்க வஞ்சியரின் வீட்டுத்
தயிர்ப் பாலை எல்லாம் உண்டு பசுபோலே ஒளிந்திடுவான்

அஞ்சி நின்று அடியும் பட்டு அன்னையும் வியந்திடவே
அண்ட சராசரம் பவள வாயில் காட்டிடுவான்…(2)
(ஆயிரம் ஆயிரம்)

இது தான் ஓரளவுக்குச் சரியான பாடல் வரிகள், பாம்பே ஜெயஸ்ரீ பாடுவதில் சில வார்த்தைகளைத் தவறாக உச்சரிக்கிறார், இருந்தாலும் அவர் குரலினிமைக்காகவும், ராகானுபவத்திற்காகவும் ரசிக்கலாம். கீழே கிளிக்குங்கள்.

[haiku url=”https://kirukkals.com/wp-content/uploads/2010/08/Aayiram-Aayiram-Charukesi-Adi.mp3″ title=”ஆயிரம் ஆயிரம் கோபியர்களோடு”]

அனைவருக்கும் என் கிருஷ்ண ஜெயந்தி வாழ்த்துக்கள்.

நன்றி:
Aayiram Aayiram English Lyrics and Information
சாருகேசியில் அமைந்த பாடல்கள்

பிடித்த பாடல்

கார்த்திகை அதிகாலை – ஐயப்ப கானம்

என் அப்பா தொடர்ந்து பல வருடங்கள், சபரிமலைக்கு மாலை போட்டு, விரதம் இருந்து, தரிசனம் செய்து வந்து இருக்கிறார்கள்.
பக்தி என்றால் என்ன என்பதை வாழ்க்கையாக நடத்திக் காண்பித்த நாட்கள் அவை.

அப்போதெல்லாம், அப்பா ஐயப்பன் பக்திப் பாடல்கள் அடங்கிய சில ஒலிப் பேழைகளை [Cassette Tapes] வாங்கி வருவார்கள்.
கங்கை அமரன் எழுதி இசையத்து, கே ஜே யேசுதாஸின் கந்தர்வக் குரலில் கணீரென ஒலிக்கும் அந்தப் பாடல்கள்.
இப்பவும் வரிகள் மனப்பாடமாய்த் தெரியும் அளவுக்குப் பதிந்தவை.

காலங்கள் உருண்டோட, இப்போது அந்த ஒலிப்பேழைகள் போன இடம் தெரியவில்லை.
கடைகளில் கிடைக்குமா? தெரியவில்லை…

இன்று காலையில் ஏனோ “கார்த்திகை அதிகாலை நீராடி” பாடலை முணுமுணுக்க ஆரம்பித்தேன்.
மதியம் கூகுளாண்டவரிடம் மன்றாடியதில் கடைசியாக அந்தப் பாடல் youtube-ல் தரிசனம்.

இப்போது அது உங்களுக்காக!
Continue reading “கார்த்திகை அதிகாலை – ஐயப்ப கானம்”

பிடித்த பாடல்

காதல் என் வாழ்வில் – ரவி, ஹரி, சூப்பர் சிங்கர் 2008

சில வாரங்களுக்கு முன்னால் விஜய் தொலைக்காட்சியின் சூப்பர் சிங்கர் 2008 [Super Singer 2008] நிகழ்ச்சியைப் பார்த்துக் கொண்டிருந்தேன். அப்போது இந்தப் பாடலை போட்டியில் பங்கேற்றுக் கொண்டிருந்த, ரவி மற்றும் ஹரி [சகோதரர்கள்] பாடத் தொடங்க, ஒரு நிமிடம் அப்படியே நின்றுவிட்டேன்.

What an excellent Composition!!!

இந்தப் பாடல், அவர்களே இயற்றி இசையமைத்த பாடல் என்பது தெரியாமல், உடனே இணைய வலையில் போய் “காதல் என் வாழ்வில்” என்று தேடிக் கொண்டிருந்தேன். ஒன்றும் அகப்படவில்லை. [ஒருவேளை எதிர்காலத்தில் யாரேனும் தேடும்போது இந்தப் பதிவு தென்படலாம்].

பிறகு YouTube-இல் “Super Singer 2008” என்று தேடிப் பார்த்து, சில பல எபிசோடுகளைக் கடந்து இந்தப் பாட்டைக் கண்டுபிடித்தேன்.
கேட்டு மகிழுங்கள். [பாடல் மட்டும் கேட்க விரும்பினால், ஒரு நிமிடம் வரை ஓட்டி விடுங்கள்(Forward)].

பிடித்த பாடல்

எஸ்.எஸ்.குமரன் என்றொரு புதிய இசையமைப்பாளரின் இசையில் ஒரு சில செவிக்கினிய …

பூ திரைப்படம்எஸ்.எஸ்.குமரன் என்றொரு புதிய இசையமைப்பாளரின் இசையில் ஒரு சில செவிக்கினிய பாடல்கள், வெளிவர இருக்கும் “பூ” என்கிற திரைப்படத்தில் இருக்கிறது.
இயக்குனர் “சசி” ஏற்கெனவே நல்ல படங்களைக் [உ.ம். சொல்லாமலே, டிஷ்யூம்] கொடுத்த இயக்குனர். பொதுவாக இவர் படத்தில் பாடல்களும் சிறப்பாகவே அமைந்து இருக்கும்.
இந்தப் படத்தில் குறிப்பாக சின்மயி பாடிய “ஆவாரம் பூ”, குழந்தைப் பாடகர்களால் பாடப்பட்ட “ச்சூ ச்சூ மாரி” இரண்டு பாடல்களும் ரசிக்கும்படி உள்ளது. கேட்டுப் பாருங்கள்.

பிடித்த பாடல்

முந்தைய பதிவின் பின்னூட்டத்தில், வேளராசி என்பவர் குறிப்பிட்டது தான் இந்தப் …

முந்தைய பதிவின் பின்னூட்டத்தில், வேளராசி என்பவர் குறிப்பிட்டது தான் இந்தப் பதிவின் பாடல்.
Listeners Choice by Bombay Jayashreeபாடல் : கண்டேன் சீதையை
பாடியவர்: பாம்பே ஜெயஸ்ரீ
இயற்றியவர்: அருணாச்சலக் கவிராயர்
இசைத் தொகுப்பு: Listener’s Choice – Sold online at Amazon.com
ராகம்: பாகேஸ்ரீ [Bageshri]
தாளம்: ஆதி [திஸ்ர நடை]

அனுமன் இலங்கை சென்று, சீதையைக் கண்டு திரும்பி வந்து ராமனிடம் சொல்வதைச் சொல்லும் பாடல். அனுமனின் வரவுக்கும், அவர் சொல்லப் போகும் செய்திக்குமாய், ராமனும் மற்றவர்களும் ஆவலாய்க் காத்திருக்கின்றனர். அவர்கள் ஆவலை உணர்ந்து, அனுமன் “கண்டேன்” என்ற வார்த்தையை முதலில் சொல்லித் தொடங்குகிறார். இந்தப் பாடலும் இதற்கு முந்தைய பாடலும், அருணாச்சலக் கவிராயர் எழுதிய “ராமநாடகம்” என்னும் தொகுப்பில் இருந்து எடுக்கப்பட்டது.

பல்லவி:
கண்டேன் கண்டேன் கண்டேன் சீதையை
கண்டேன் ராகவா….நான்
கண்டேன் கண்டேன் கண்டேன் சீதையை
கண்டேன் ராகவா..

அனுபல்லவி:
அண்டரும் காணாத லங்காபுரியில்…(2)
அரவிந்த வேதாவைத் தரவந்த மாதாவைக்
(கண்டேன்)

சரணம்:
பனிக்கால பாரிஜம் போல நிறங் கூசிப்
பகலோரு யுகமாக் கழித்தாளே பிரயாசி (2)
நினைத்தங்கே ராவணன் அந்நாள் வர
சீச்சி நில்லடா என்று ஏசி… (2)
தனித்து தன் உயிர் தன்னை தாங்கிட மகராசி (2)
சாரும்போதே
நானும் சமயம் ஈதே வாசி
இனி தாமதம் செயல் ஆகாதென்றிடர் மீசி
ராமா ராமா ராமா என்றெதிர் பேசிக்…
(கண்டேன்)

கண்டேன் சீதையை – பாம்பே ஜெயஸ்ரீ
[audio:kanden-seethaiyai.mp3]
இந்த ராகத்தைக் கேட்க YouTube-இல் தேடியபோது கிடைத்தது…அதையும் ரசியுங்கள்.
Continue reading “முந்தைய பதிவின் பின்னூட்டத்தில், வேளராசி என்பவர் குறிப்பிட்டது தான் இந்தப் …”

பிடித்த பாடல்

அவ்வப்போது நான் மிகவும் ரசித்த பாடல்களை எழுதி வந்து இருக்கிறேன். …

அவ்வப்போது நான் மிகவும் ரசித்த பாடல்களை எழுதி வந்து இருக்கிறேன்.
இந்த முறை பாம்பே ஜெயஸ்ரீ பாடிய இந்தப் பாடலை எடுத்துக் கொள்வோம்.

பாடல் : எப்படி மனம் துணிந்ததோ? [Eppadi Manam Thuninthatho]
இயற்றியவர்: அருணாச்சலக் கவிராயர்
பாடியவர்: பாம்பே ஜெயஸ்ரீ
ராகம்: ஹுசைனி
இசைத்தொகுப்பு: அமிர்தம்

ராமனைப் பதினான்கு வருடம் காட்டிற்கு அனுப்ப தசரதன் முடிவு செய்துவிட, “நான் சென்று வருகிறேன்” என சீதையிடம் விடைபெற விழைகிறான் ராமன். அதற்கு சீதையின் பதிலாக வருகிறது இந்தப் பாடல்.
பாம்பே ஜெயஸ்ரீயின் குரலில் உணர்வுகளைக் குழைத்து வரும் பாடலைக் கேட்க இங்கே கிளிக்குங்கள்.
அமிர்தம் on ராகா.காம்.

பல்லவி:
எப்படி மனம் துணிந்ததோ? சுவாமி!
எப்படி மனம் துணிந்ததோ, சுவாமி?
வனம் போய் வருகிறேன் என்றால்
இதை ஏற்குமோ பூமி?
(எப்படி)
அனுபல்லவி:
எப்பிறப்பிலும் பிரியேன், விடேன் என்று கைதொட்டீரே..(2)
ஏழையான சீதையை நட்டாற்றில் விட்டீரே…(2)
சரணம்:
கரும்பு வில் முறித்தாற் போலே தள்ளாலாச்சுதோ?
ஒரு நாளும் பிரியேன் என்று சொன்ன சொல்லும் போச்சுதோ? (2)
வருந்தி வருந்தி தேவரீர் மெல்ல
வார்த்தையால் கொல்லாமல் கொல்ல (2)
இரும்பு மனது உண்டாச்சுதல்லவோ?
என்னை விட்டுப்
பிரிகிறேன் என்று சொல்ல….
(எப்படி மனம் துணிந்ததோ)

பிடித்த பாடல்

யுவன்சங்கர் ராஜாவின் இசையில், ராஜா சார் சில அற்புதமான பாடல்களைப் …

யுவன்சங்கர் ராஜாவின் இசையில், ராஜா சார் சில அற்புதமான பாடல்களைப் பாடி இருக்கிறார்.
யுவன்சங்கர் ராஜாவிற்கு நன்றாய்த் தெரிந்திருக்கிறது, எந்த சிச்சுவேஷனுக்கு ராஜா சாரின் குரல் பொருத்தமாய் இருக்கும் என்று. வேறு யாருடைய இசையிலும், ராஜா சார் பாடியதாகத் தெரியவில்லை.

“எங்கெங்கோ கால்கள் செல்லும் பாதையில்” – நந்தா
“நம்ம காட்டுல மழ பெய்யுது” – பட்டியல்
“அறியாத வயசு, புரியாத மனசு” – பருத்திவீரன்
“பறவையே எங்கு இருக்கிறாய்?” – கற்றது தமிழ்

எல்லாப் பாடல்களையும் தனித் தனியாய் அலசலாம், ஆனால் இந்தப் பதிவில் நான் பேச விரும்புவது சமீபத்தில் எனது ஐஃபோனில் அதிகமாக கேட்கப்பட்ட பாடலில் சேர்ந்து கொண்ட, கவிஞர் நா.முத்துக்குமார் எழுதிய, “பறவையே எங்கு இருக்கிறாய்?” பாடல் பற்றி.

பறவையே எங்கு இருக்கிறாய்?
பறக்கவே என்னை அழைக்கிறாய்,
தடயங்கள் தேடி வருகிறேன் அங்கே…
பறவையே எங்கு இருக்கிறாய்?
பறக்கவே என்னை அழைக்கிறாய்,
தடயங்கள் தேடி வருகிறேன் அங்கே…

அடி என் பூமி தொடங்கும் இடம் எது? நீ தானே!!
அடி என் பாதை இருக்கும் இடம் எது? நீ தானே!!!
பார்க்கும் திசைகளெல்லாம் பாவை முகம் வருதே,
மீன்கள் கானலின் நீரில் தெரிவதுண்டோ?
கண்கள் பொய்கள் சொல்வதுண்டோ?

நீ போட்ட கடிதத்தின் வரிகள் கடலாக,
அதில் மிதந்தேனே பெண்ணே நானும் படகாக….
(பறவேயே…)

உன்னோடு நானும் போகின்ற பாதை
இது நீளாதோ தொடு வானம் போலவே!
கதை பேசிக் கொண்டே வா காற்றோடு போவோம்
உரையாடல் தீர்ந்தாலும் உன் மௌனங்கள் போதும்.
இந்த புல் பூண்டும் பறவை நாமும் போதாதா?
இனி பூலோகம் முழுதும் அழகாய்ப் போகாதா?

முதல் முறை வாழப் பிடிக்குதே!
முதல் முறை வெளிச்சம் பிறக்குதே!
முதல் முறை முறிந்த கிளையொன்று பூக்குதே…..!

முதல் முறை கதவு திறக்குதே!
முதல் முறை காற்று வருகுதே!
முதல் முறை கனவு பலிக்குதே அன்பே…..!

(பறவையே)

ஏழை…காதல்….
மலைகளில் தனில் தோன்றுகின்ற ஒரு நதியாமோ……
மண்ணில்..விழுந்தும் ஒரு காயமின்றி…
உடையாமல் உருண்டோடும் நதியாகிடுதோ….

இதோ இதோ இந்தப் பயணத்திலே
இது போதும் கண்மணி,
வேறென்ன நானும் கேட்பேன்?
பிரிந்தாலும் மனதிலே இந்த நொடியில் என்றும் வாழ்வேன்…!

இந்த நிகழ்காலம் இப்படியே தான் தொடராதா?…
என் தனியான பயணங்கள் இன்றுடன் முடியாதா?…

முதல் முறை வாழப் பிடிக்குதே!
முதல் முறை வெளிச்சம் பிறக்குதே!
முதல் முறை முறிந்த கிளையொன்று பூக்குதே…..!

முதல் முறை கதவு திறக்குதே!
முதல் முறை காற்று வருகுதே!
முதல் முறை கனவு பலிக்குதே அன்பே…..!

ராஜா சாரின் தன் குரலில் ஒவ்வொரு வரிக்குள்ளும் எத்தனை உணர்ச்சிகளை உள்ளடக்கி இருக்கிறார், அதுவும் அந்த “முதல் முறை” வரிகள் ஒவ்வொன்றும், எவ்வளவு மெருகுடன் வெளிவருகிறது பாருங்கள். Wow…What an awesome rendition!

முழுப்பாடலையும் கேட்க கீழே கிளிக்குங்கள்.
பறவையே எங்கு இருக்கிறாய்?
[audio:paravaiye-engu-irukkiraai.mp3]