அஞ்சலி

பூவுலகை விட்டு மறைந்தாலும் நினைவுகளில் வாழும் எங்கள் அம்மா பற்றி …

பூவுலகை விட்டு மறைந்தாலும் நினைவுகளில் வாழும் எங்கள் அம்மா பற்றி எழுத நினைக்கிறேன்.
கடந்த ஏப்ரல் மாதம் 18ஆம் தேதி சென்னையில் இருந்து அண்ணனிடம் இருந்து ஒரு தொலைபேசி அழைப்பு வருகிறது.
அம்மா நம்மை விட்டுப் பிரிந்தார் என்கிற செய்தியோடு.
உடனே அவசரமாக அடுத்த விமானத்திலேயே அட்லாண்டாவில் இருந்து கிளம்பி சென்னை வந்து, சுவாமிமலைக்குச் சென்றோம். அடுத்த விமானத்திலேயே வந்தாலும், இரண்டாவது நாள் ஆகிவிடுகிறது இந்தியாவில்.
வந்து, பார்த்து, அழுது அடுத்த ஒரு மணி நேரத்திற்குள் இறுதிச்சடங்குகளை நிறைவேற்றினோம்.

Amma and me on June 2022

இந்த புகைப்படம் சென்ற வருடம் (ஜூன் 2022), ஏழாண்டுகளுக்குப் பிறகு அம்மாவைப் பார்த்த முதல் நாளில் எடுத்தது.

அம்மா என்றாலே அன்பு பாசம் நேசம் கருணை எல்லாமே தான்.
உலகத்தின் எல்லா அம்மாக்களையும் போல.
எனக்கு அம்மா ஒரு தோழனும்.
அதிலும் எங்கள் அப்பாவை 2006-இல் இழந்த பிறகு, தோளுக்கு மிஞ்சிய தோழனாய் நடத்தி இருக்கிறார்.
எதையும் பகிர்ந்துகொள்வேன்.
அயல் நாட்டில் வாழ்வதில் உள்ள சவால்களையும், அவதிகளையும், அலுவலகத்தில் நடக்கும் அரசியல் என அனைத்தும் அம்மாவிடம் பேசும் அந்த அரைமணி நேரத்தில் பேசப்பேச நம்மை அறியாமல் நமக்கே இவற்றை சமாளிக்கும் வழிகளும் உத்வேகமும் தோன்றிவிடும்.

என் மகள்களைக் கடிந்துகொண்ட நேரங்களில் அம்மாவிடம் தான் அதற்கு பாவ மன்னிப்பு கேட்பதே. “கோவத்துல சத்தம் போட்டேன் மா”.

கோவிட் காலத்தில், நானே ஒரு பாடகன் என அறிவித்துக்கொண்டு Singer Sadish என முகநூலில் பக்கம் திறந்து, பாட்டுக்களைப் பாட , இந்த தொழில்நுட்ப சவால்களை மீறி , அவர் கைப்பேசியில் ஒரு சில மறுமொழிகளை (“சூப்பர் தம்பி”) தட்டச்சு செய்து அனுப்புவார். இப்பொழுதும் அவற்றைப் பார்க்கும் பொழுது தோன்றும் மகிழ்ச்சியும் உற்சாகமும் என்னவென்று சொல்லுவேன்.

முருக பக்தையான அம்மா எங்கள் இளம் வயதில் பாடிய “கற்பனை என்றாலும்” பாடல். முதன் முதலில் tape recorder வீட்டுக்கு வந்த நாட்களில் அம்மாவைப் பாட வைத்து ஒலிப்பதிவும் செய்து இருக்கிறோம். அம்மாவிற்குப் பிடித்த பாடல்கள் “ஒரு பொய்யாவது சொல் கண்ணே”, “பொய் சொல்ல கூடாது காதலி” என்பதெல்லாம் இனி அவற்றை எங்கேயும் கேட்டாலும் பாடினாலும் நினைவலைகளில் ஒரு புன்னகையை ஏந்துமே.

எனக்கும் என் அண்ணன், தம்பி தங்கைக்கும் பாலமாய் இருந்ததும் அம்மா தான். அம்மாவுடன் பேசும் தொலைபேசி உரையாடலில், இவர்கள் அனைவரையும் கொண்டுவந்துவிடுவார். “ஏன்டா , தம்பி அங்கே தான் இருக்கிறான், ஒரு போன் போட்டு பேசினியா? இல்லை ஒரு எட்டு, போய் பார்த்துட்டு வாயேன்”, “அடுத்த வாரம் இவங்க பர்த்டே வருது அப்போ கால் பண்ணி வாழ்த்து சொல்லிடு.” “அத்தைக்கு உடம்பு முடியலை, நீ ஒரு தடவை போன்ல விசாரிச்சுக்கோ”. “எனக்கு போன தடவை ஹாஸ்பிடல் பில் எக்கச்சக்கமா போச்சு, உங்க அண்ணன் கூட பேசி, நீ எப்படி ஹெல்ப் பண்ணணும்னு பாரு.”

இனி நினைவுகளில் வாழும் என் அம்மாவிற்கு, முதன் முறையாக “அன்னையர் தின வாழ்த்துக்களை” எழுத்தில் அனுப்புகிறேன்.

Happy Mother’s Day 2023

நான் பாடிய பாடல்

மந்திரப் புன்னகை என்கிற படத்தில், வித்யாசாகர் இசையில், சுதா ரகுநாதன் …

மந்திரப் புன்னகை என்கிற படத்தில், வித்யாசாகர் இசையில், சுதா ரகுநாதன் பாடிய பாடல் இது. எழுதியது அறிவுமதி.

நண்பர் கானா பிரபா, தன்னுடைய முகப்புத்தகத்தில் வெளியிட்ட ஒரு பதிவில், கடந்த மாதம் தான் இந்த பாடலை முதன் முறையாகக் கேட்டேன்.

கேட்ட பொழுதில் இருந்து, தினமும் என் காதுகளுக்கு அள்ளி அள்ளி ஊற்றியதில் இதன் வரிகள், மனதில் பதிந்து போனது. பின்னர் ஸ்ம்யூல் என்கிற கைப்பேசிக்கான செயலியில் இதனை என் குரலில் பாடிப் பதிந்தேன். அதனைக் கீழே உள்ள காணொளியில் கண்டு ரசியுங்கள்.

கண்ணா....கண்ணா....கண்ணா
என்ன குறையோ எந்த நிறையோ
எதற்கும் நான் உண்டென்பான் கண்ணன்
என்ன தவறோ என்ன சரியோ
எதற்கும் நான் உண்டென்பான் கண்ணன்
என்ன வினையோ என்ன விடையோ
அதற்கும் நான் உண்டென்பான் கண்ணன்
அதற்கும் நான் உண்டென்பான் கண்ணன்
என்ன குறையோ எந்த நிறையோ
எதற்கும் நான் உண்டென்பான் கண்ணன்
நன்றும் வரலாம் தீதும் வரலாம்
நண்பன் போலே கண்ணன் வருவான்
வலியும் வரலாம் வாட்டம் வரலாம்
வருடும் விரலாய் கண்ணன் வருவான்
நேர்கோடு வட்டம் ஆகலாம்
நிழல் கூட விட்டுப் போகலாம்
தாளாத துன்பம் நேர்கையில்
தாயாக கண்ணன் மாறுவான்
அவன் வருவான் கண்ணில் மழை துடைப்பான்
இருள் வழிகளிலே புது ஒளி விதைப்பான்
அந்தக் கண்ணனை அழகு மன்னனை
தினம் பாடி வா மனமே
என்ன குறையோ எந்த நிறையோ
எதற்கும் நான் உண்டென்பான் கண்ணன்
கண்ணன்....கண்ணன்....கண்ணன்...கண்ணன்
உண்டு எனலாம் இல்லை எனலாம்
இரண்டும் கேட்டுக் கண்ணன் சிரிப்பான்
இணைந்து வரலாம் பிரிந்தும் தரலாம்
உறவைப்போலே கண்ணன் இருப்பான்
பனிமூட்டம் மலையை மூடலாம்
வழி கேட்டுப் பறவை வாடலாம்
புதிரானக் கேள்வி யாவிலும்
விடையாகக் கண்ணன் மாறுவான்
ஒளிந்திருப்பான்..எங்கும் நிறைந்திருப்பான்
அவன் இசைமழையாய் உலகினை அணைப்பான்
அந்தக் கண்ணனை..கனிவு மன்னனை
தினம் பாடிவா மனமே.......

பாடல் பிடித்து இருந்தால், கீழே உள்ள இடத்தில் கமெண்ட்டுங்கள்.

நான் பாடிய பாடல்

மேலும் சில பாடல்கள் – என் குரலில் (2)

நீண்ட இடைவெளிக்குப் பிறகு, மீண்டும் என்னுடைய சில பாடல்களோடு உங்களைச் சந்திப்பதில் மகிழ்ச்சி.
சமீபத்தில், அட்லாண்டா மாநகரில் நிகழ்ந்த ஒரு தன்னார்வத் தொண்டர்களுக்கான நன்றி தெரிவிக்கும் நிகழ்ச்சியில் என்னைப் பாட அழைத்து இருந்தனர்.


அப்போது, ராஜா சாரின் இந்த இனிமையான பாடலைத் தேர்ந்தெடுத்துப் பாடினேன். அப்போது எடுக்கப்பட்ட காணொளி இங்கே கீழே. பார்த்து மகிழுங்கள். என்னுடன் இணைந்து பாடியவர்,  பரிமளா.

கேளடி கண்மணி படத்திற்காக, கே.ஜே.யேசுதாஸும் உமா ரமணனும் பாடியது.

இதே நிகழ்வில், மரகதமணி அவர்களின் இசையில், அழகன் திரைப்படத்தில் வந்த ‘சாதி மல்லி பூச்சரமே’ பாடலையும் பாடினேன். படத்தில் எஸ்.பி.பி அவர்கள் பாடியது.
அதன் காணொளி இங்கே.

இதற்கு முன்னால், ஃபெப்ரவரி மாதத்தில், எங்கள் குழுவின் மாதாந்திர சந்திப்பில், டி இமானின் இசையில் பிரதீப் குமார் பாடிய ‘அம்முக் குட்டியே’ பாடலைப் பாடினேன். அதுவும் நண்பர்கள் மிகவும் ரசித்துக் கேட்டனர். அதன் காணொளி இங்கே.

ரசித்து மகிழ்ந்தாலும், இல்லையென்றாலும் கமெண்ட்டுங்கள்.

நான் பாடிய பாடல் · பிடித்த பாடல்

பாருருவாய பிறப்பற வேண்டும் – திருவாசகம், இளையராஜா மற்றும் நான்

பாருருவாய பிறப்பற வேண்டும்…


திருவாசகம் – மாணிக்கவாசகர், சிவபெருமானை வேண்டிப் பாடிய பல்வேறு பாடல்களின் தொகுப்பு. இதன் பொதுவான சாராம்சம், ‘மீண்டும் மீண்டும் பிறந்து இறக்கும் இந்தப் பிறவியில் இருந்து விடுவித்து விடு இறைவா’ எனத் தனி மனிதன் ஒருவன், கடவுளிடம் இறைஞ்சிக் கேட்கும் பாடல்கள்.

இதனாலேயே, இறக்கும் தருவாயிலும், இறுதிச் சடங்கிலும் பெரும்பாலும் திருவாசகம் ( குறிப்பாக சிவபுராணம்) பாடப்படுகிறது.

தாரை தப்பட்டை ராஜா சாரின் ஆயிரமாவது படம்.
அதன் பின்னணி இசையில் இரு வேறு இடங்களில், ராஜா சார் திருவாசகத்தில் இருந்து இரண்டு பாடல்களுக்கு இசை சேர்த்து உலவ விடுகிறார்.

பாருரு வாய பிறப்பறவேண்டும் பத்திமை யும்பெற வேண்டும்
சீருரு வாய சிவபெரு மானே செங் கமல மலர்போல்
ஆருரு வாயஎன் னார முதேஉன் அடியவர் தொகை நடுவே
ஓருருவாய நின் திருவருள் காட்டி என்னையும் உய்யக்கொண் டருளே. 599

பத்தில னேனும் பணிந்தில னேனும்உன் உயர்ந்தபைங் கழல் காணப்
பித்தில னேனும் பிதற்றில னேனும் பிறப்பறுப்பாய எம்பெருமானே
முத்தனை யானே மணியனை யானே முதல்வ னேமுறை யோஎன்று
எத்தனை யானும் யான்தொடர்ந் துன்னை இனிப்பிரிந் தாற்றேனே. 602

Project Madurai என்கிற தளத்தில் இருந்து எடுக்கப்பட்டது.

ஒன்றிரண்டு முறை கேட்டாலே பாடலின் பொருள் ஓரளவுக்குப் புரிந்துவிடும்.

நான் படித்துப் புரிந்து கொண்டதைச் சொல்கிறேன்.
“செங்கமல மலர் போன்ற அழகான சிவபெருமானே, நான் உன் அடியவர்களைப் பார்க்கிறேன்.
உன் காலடியில் சேர்த்துக் கொள் என உன் மீது பைத்தியமாய் ஆகி, பிதற்றி உழல்கிறார்கள்.
நான் அந்த அளவுக்கு இன்னும் பண்படவில்லை;பற்றில்லாதவனாய் ஆகவில்லை; பணிவு என்னிடம் இல்லை.
ஆனாலும் நானும் உன் அடியார்கள் கூட்டமாய் நிற்கின்ற இந்த இடத்திலே, அவர்களுள் ஒருவன் போல ஒட்டிக் கொண்டு நின்று கொள்கிறேன். நீ அவர்களுக்கெல்லாம் அருளும் வேளையில் அப்படியே எனக்கும் முக்தியைக் கொடுத்துவிடேன். முத்து போன்றவன் நீ, நல்ல மணி போன்றவன் அல்லவா, தயவு செய்து எனக்கும் சேர்த்து அருள் செய்துவிடேன்…”

இசைஞானியின் இசைக்கு, என் புகழாரம் தேவையில்லை. சத்யபிரகாஷ் மற்றும் சுர்முகிக்கு நம் பாராட்டுகளைப் பகிர வேண்டும். இசைக்கும், பாடலின் பொருளுக்கும் சிறிதும் குறையில்லாது பாடி இருக்கின்றனர்.

சமீபத்தில் ஒரு நண்பர் (அவர் பெயரே சிவக்குமார், சிவ பக்தர் தாம்) இந்தப் பாடலை என் குரலில் பதிவு செய்ய உதவினார். கீழே இருப்பது அதே பாடல் என் குரலில்.

கேளுங்கள்.

உங்கள் எண்ணங்களைப் பகிருங்கள். நன்றி.

 

சுயபுராணம் · நாட்டு நடப்பு

ஜர்கண்டி ஜர்கண்டி – கூச்சண்டி கூச்சண்டி

ஃப்ராங்க்ஃபர்ட் விமான நிலையத்தில் இறங்கி, அடுத்து அட்லாண்டா விமானம் பிடிக்க ஒன்றரை மணி நேரம் தான் இருந்தது.
இதற்கிடையில் ஒரு பஸ், ரெண்டு எஸ்கலேட்டர்கள், ஒரு ட்ரெயின் இவற்றைக் கடக்க ஓடிக் கொண்டிருந்தேன்.
அப்போது பக்கத்தில் வந்த ஒரு நபர் “நான் சிகாகோ போறேன், நீங்க அட்லாண்டா தானே போறீங்க, இவங்களை அந்த கேட் வரை கொண்டு போய் விட்டுடுங்களேன் ப்ளீஸ்’ என்று தெலுங்கு மட்டுமே பேசத் தெரிந்த ஒரு தம்பதியரைக் காட்டினார்.
“அடடா எனக்கு சுத்தமா தெலுங்கு தெரியாது பாஸ்” என சொல்ல எத்தனிக்கும் முன்
“ஜஸ்ட் கேட் வரைக்கும் கொண்டு போய் விடுங்க போதும்” என்று சொல்லி நழுவி விட்டார்.
சரி என்று அவர்களையும் கூட்டிக் கொண்டு சற்றே விரைவாக நடக்க ஆரம்பித்தேன்.
indian-couple-old
A sample Picture found at www.caricaturist.sg/, provided here as it fits the story well.
தெலுங்கு அம்மாவிற்கு கொஞ்சமே கொஞ்சம் ஆங்கிலம் புரிந்தது. இல்லாவிட்டால் சில சமயம் தமிழையே கொஞ்சம் உடைத்து உடைத்து பேசினால் புரிந்து கொள்கிறார். ஏற்கெனவே ஒருமுறை அவர் அமெரிக்கா விஜயம் செய்து இருக்கிறாராம்.
அப்பா கேரக்டர்க்குத் தெலுங்கு மட்டுமே பரிச்சயம். காவி நிறத்தில் குர்த்தாவும் வேஷ்டியும் அணிந்து இருந்தார்.
“வேகமா நடக்கணும்” என்பதை எனக்குத் தெரிந்த தெலுங்கில் “ஜர்கண்டி ஜர்கண்டி” என்றேன் .
உடனே அந்த அம்மா ஏதோ சொல்ல, அவர் வேஷ்டியை மடித்து கட்டிக் கொண்டு “என் ராசாவின் மனசிலே” ராஜ்கிரண் போல தொடையைக் காட்டி நடக்க ஆரம்பித்துவிட்டார். பக்கத்தில் வந்த ஒரு ஜெர்மானிய ஏர்போர்ட் தொழிலாளி “என்ன உங்க அப்பா இப்படி வேஷ்டியைத் தூக்கிக்கிட்டு நடக்கிறார்” என்பது போல என்னைப் பார்த்தார். (ஒருவேளை எனக்குத்தான் அப்படி தோனுச்சோ ?)
இருந்தாலும் திரும்ப வேஷ்டியை இறக்கி விடுங்க என்று தெலுங்கில் சொல்லத் தெரியாததால் சைகையில் நான் நடித்துக் காட்டி….
“ஸ்ஸ்ஸ்ஸ் ஸப்பா…இப்பவே கண்ணைக் கட்டுதே”…

அடுத்து செக்குரிட்டி செக் பாயிண்டில் இலவசமாக “ஃபுல் பாடி எக்ஸ் ரே” எடுத்துக் கொண்டிருந்தார்கள். airport-security ஒவ்வொருவராக கண்ணாடிக் கூண்டொன்றில், இரண்டு கையையும் தூக்கிக் கொண்டு நிற்க, அந்த மெசின் ஒரு முழு எக்ஸ் ரேயை எடுத்துக் கொள்ளும். இதை நான் அவர்களுக்கு விளக்குமுன், அந்த ஏர்போர்ட் பணியாளர், தெலுங்கு அப்பாவை முதலில் அழைத்து விட்டார்.
இவருக்கு “எப்படி நிற்க வேண்டும், எப்படி கையைத் தூக்கிக் கொள்ள வேண்டும்” என்பதெல்லாம் ஜெர்மனியிலும் ஆங்கிலத்திலும் சொல்லி முடித்துப் பிறகு அவரே நடித்து காண்பிக்க….
“அப்ப்ப்பாபாடா !”

எல்லாம் முடிந்து, கேட் அருகே வந்து சேர்ந்த போது, அம்மா தான் ஆரம்பித்தார். “டாய்லட்… டாய்லட், ரெஸ்ட்ரூம்” என்றார்.
“அம்மா, ஒன்லி ஃபைவ் மினிட்ஸ், குயிக், சீக்கிரம்” என்றேன். “குயிக் ஒன்லி” என்றவர் அவரிடம் திரும்பி ஏதோ தெலுங்கில் சொல்ல, அவர் எல்லாம் எனக்குத் தெரியும் என்பது போல தலையசைத்து அவசரமா ஒரு ரெஸ்ட் ரூமிற்குள் புகுந்து மூன்றே நிமிடத்தில் வெளியே வந்து விட்டார். அடுத்த சில நொடிகளில் உள்ளே சென்ற துப்புரவுத் தொழிலாளி ஏதோ முனகிக் கொண்டே வெளியே வந்து “Restroom not in Service” என்று போர்டை மாட்டிவிட்டு உள்ளே சென்றார்.
இதெல்லாம் அப்பாவோட தப்பு இல்லை. இது தான் வாழ்க்கைல அவர் பார்த்த முதல் வெஸ்டர்ன் டாய்லட். அவர் என்ன பண்ணுவார் பாவம். கொஞ்சம் அதிகமா டிஸ்ஸு பேப்பரை ஒரே நேரத்தில் ஃப்ளஷ் செய்து விட்டார் போல. அதுக்குப் போய்ட்டு…

அடுத்து “ஃப்ராங்க்ஃபர்ட் டு அட்லாண்டா” ஃப்ளைட்டில் ஏறி அவர்கள் இருக்கைகளில் அமர வைத்து, அதற்கு இன்னும் மூன்று வரிசைக்குப் பின்னால் என்னுடைய இடம் தேடி அமர்ந்தேன். “அப்பாடா, இன்னும் 10 மணி நேரம் இருக்கிறது. கொஞ்சம் நல்லா தூங்கலாம்” என்று அவர்கள் கொடுத்த போர்வையைக் கழுத்து வரை போர்த்திக் கொண்டு, சீட்டைப் பின்னால் முடிந்த வரை சாய்த்துக் கொண்டு, கண்ணை மூடி, நிம்மதியாய்…
“எக்ஸ்கியூஸ் மி, திஸ் லேடி வான்ட்ஸ் டு டாக் டு யூ” என்று பக்கத்து சீட்காரர் என்னை எழுப்ப, யார் என்று பார்த்தால் நம்ம தெலுங்கம்மா.
சுங்க வரித்துறையின் படிவத்துடன் (Customs Form). மணி என்ன என்று பார்த்தேன். கிளம்பி ரெண்டு மணி நேரம் தான் ஆகியிருக்கு. இறங்குறதுக்கு இன்னும் ஆறு ஏழு மணி நேரம் இருக்கு.
“நீங்க போய் உட்கார்ந்துக்கோங்க, நானே இன்னும் கொஞ்ச நேரத்துல உங்க சீட்டுக்கு வர்றேன்” அப்படின்றதை எனக்குத் தெரிந்த தெலுங்கில் “கூச்சண்டி, கூச்சண்டி, நேனே வஸ்தாவு” என்றேன். இதுவரை நான் பேசியதிலேயே இது தான் அவருக்கு நன்றாகப் புரிந்தது போல, கொஞ்சம் அதிகமாகவே சிரித்துக்கொண்டே நகர்ந்தார்.

இப்படி எழுந்ததில், தூக்கம் கலைந்து போனதால், முன்னால் இருந்த ஒளித்திரையில் என்ன படம் பார்க்கலாம் என்று தேடினேன். ‘பேசாம ஏதாச்சும் தெலுங்கு படத்தை சப்-டைட்டிலோடு பார்த்து, இறங்குறதுக்குள்ளே தெலுங்கு கத்துக்கலாமா’ என்ற எண்ணத்தைப் புறந்தள்ளி ‘Happy New Year’ என ஆங்கிலத்திலேயே பெயரிடப்பட்ட ஹிந்தி படத்தை ஓடவிட்டேன். ஷாருக்கான் நடிப்பில் ஒரு ‘Oceans 11’.

படம் முடியும் நேரத்தில் நம் தெலுங்கம்மா பாஸ்போர்ட், கஸ்டம்ஸ் ஃபார்முடன் வந்துவிட்டார் .
கஸ்டம்ஸ் ஃபார்ம் ஒரு குடும்பத்திற்கு ஒன்றே போதும். சரி என்று அவர் கணவரின் பாஸ்போர்ட்டில் இருந்து விவரங்களை எடுத்து படிவத்தை நிரப்பிக் கொண்டிருந்தேன் .
“அமெரிக்கா வில் எந்த அட்ரஸ்” என்றேன்.
“மேங்கோ மேரி ” என்றார் .
“மேங்கோ மேரி யா? புல் அட்ரஸ் வேணும் ” என்றேன்.
அம்மணி தன் கைப்பையில் இருந்து ஒரு குட்டி போன் புக்கைக் கையில் எடுத்து ஒரு பக்கத்தைத் திருப்பி நீட்டினார் . (ஓ இந்த மாதிரி புக்கெல்லாம் இன்னும் புழக்கத்திலே தான் இருக்கா?)
அதில் நல்ல வேளையாக அட்ரஸை யாரோ ஆங்கிலத்திலேயே எழுதி இருந்தார்கள்.
“ஓ அது மாண்ட்கோ மரி , அலபாமா வா ” Montgomery Alabama. சரியா போச்சு போ !

எல்லாம் முடித்து, நிரப்பிய படிவத்தில் அவர் கணவரிடம் கையெழுத்து வாங்கிக் கொள்ள சொன்னேன்.
“அவரா? அவரு கைநாட்டு தாங்க” என்பதைக் கட்டை விரலை ஸ்டாம்ப் பேடில் உருட்டுவது போல காற்றிலேயே உருட்டிக் காட்டினார். (அட அட என்ன ஓர் அபிநயம்!)
“ஓ .. சரி பரவால்ல, நீங்களே உங்க கையெழுத்தைப் போடுங்க” என்றேன்.
“ஆனா மேலே அவர் பேர் போட்டு இருக்கே? பரவால்லையா?” என்று அவர் தெலுங்கிலேயே கேட்டாலும் எனக்குப் புரிந்தது.
“ஆங்…இதெல்லாம் மட்டும் விவரமா கேளுங்க, முதல்லயே சொல்லி இருக்கலாம்ல ஐயா கைநாட்டு ன்னு” என்பதை மனதுக்குள் சொல்லிக் கொண்டு
“ஓக்கே தான். சரி எதுக்கு வம்பு .. வேற ஃபார்ம் ஃபில் பண்ணிடுறேன்” என்று வெளியில் சொல்லிவிட்டு, இன்னொரு ஃபார்மில் அவரது விவரங்களை உள்ளிட்டேன்.
அதன் கீழே நிறுத்தி நிதானமாக அவர் கையெழுத்தைப் போட்டார். சுந்தரத் தெலுங்கில் ஒவ்வோர் எழுத்திலும் ஒரு ஜாங்கிரி.

அட்லாண்டாவில் இறங்கியதும், அவரவர் தன் பெட்டிகளைத் தூக்கிக் கொண்டு , கடகடவென நகர்ந்து கொண்டிருந்தனர். நம் தெலுங்கம்மாவும் அப்பாவும் மட்டும் இறங்கி ஓர் ஓரமாய் நின்று என்னைத் தேடிக் கொண்டிருந்தனர். சரியென்று அவர்களை அழைத்து வெளியே வரும் வேளையில், வீல் சேர் (Wheel Chair) சேவை செய்ய விமான நிலையப் பணியாளர்கள் தயாராக நின்றனர். நான் அவர்களிடம் பேசி, இவர்கள் இருவரையும் வீல் சேரில் உட்கார வைத்துவிட்டு, எஸ்கலேட்டரில் இறங்கி நடக்க ஆரம்பித்தேன். நான் இமிக்ரேஷன் கியூவில் (Immigration Queue) நின்று கொண்டிருக்கும்போதே அவர்கள் இருவரும் இமிக்ரேஷன் முடிந்து, வீல்சேரில் வெளியே அழைத்துச் செல்லப்பட்டனர். அந்த அம்மா மட்டும் திரும்பி இந்த கியூவில் நான் எங்கே இருக்கிறேன் என்று கண்ணாலேயே தேடினார். (இல்லை நான் தான் அப்படி நினைச்சுக்கிட்டேனோ என்னவோ ! 🙂 )

நான் பாடிய பாடல்

மேலும் சில பாடல்கள் – என் குரலில்

பாடும் திறமையுள்ள நண்பர்கள் சேர்ந்து மாதமொரு முறை சந்திப்போம்.
அதுபோன்ற சந்திப்புகளில் நான் பாடிய பாடல்களில் இருந்து சில, உங்கள் பார்வைக்கு.
பார்த்து கமெண்ட்டுங்கள்.

பாடும் வானம்பாடி ஹா… நான் பாடும் பாடல்…

அடியே என்ன ராகம்… ரம்மி

பட்டு வண்ண சேலைக்காரி… எங்கேயோ கேட்ட குரல்

இளஞ்சோலை பூத்ததா… பாடும் வானம்பாடி

அஞ்சலி · சுயபுராணம்

கடிதம் எழுதி இருக்கிறீர்களா?

நீங்க எப்பவாச்சும் யாருக்காச்சும் கடிதம் எழுதி இருக்கிறீர்களா?
விடுமுறை விண்ணப்பக் கடிதங்கள் [As I am suffering from fever] போன்றவை இதில் சேர்த்தி இல்லை.
பர்சனல் லெட்டர்ஸ். தமிழ்ல எப்படி சொல்லலாம்? தனிப்பட்ட கடிதங்கள்?
Inland Letter

இந்தக் காலத்துலயும் இது வழக்கத்துல இருக்கா?

நான் காலேஜ் படிச்ச காலத்துல (1993 – 97) ரெண்டு வாரத்துக்கு ஒரு தடவை தான் வீட்டுக்குப் போவோம். ஊர் சுவாமிமலை. படிச்சதெல்லாம் திண்டுக்கல்ல.
இந்த ரெண்டு வார இடைவெளில, அப்பா கிட்டே இருந்து ஒரு கடிதமாச்சும் வந்திடும். நானும் ஒரு கடிதமாவது எழுதுவேன். செல்ஃபோன்லாம் அப்போ இல்லை. வீட்டு ஃபோனே கூட ஆரம்பத்திலே இல்லை. ஃபோன் பண்றதெல்லாம் அவ்வளவு சுலபமில்லை. காலேஜ்ல இருந்து திண்டுக்கல் நகருக்குள்ள வந்து, STD Booth வந்துதான் பண்ணனும். அதுக்கெல்லாம் செலவும் அதிகமாகும். ஒவ்வொரு செகண்டும் சட்டைப் பாக்கெட்டைத் தொட்டு பார்த்துக்கிட்டே பேசுவோம். இதெல்லாம் விட கடிதம் தான் வசதி…

“அன்புள்ள அப்பாவிற்கு, நலம். நலம் தொடர மணியார்டர் அனுப்புக” என்பது போன்ற வழக்கமான கடிதங்கள் அல்ல.
“அன்புள்ள அப்பா அம்மாவிற்கு” எனத் தொடங்கி, வீட்டில் உள்ள ஓவ்வொருவரையும் குறித்த நல விசாரிப்புகளைக் கொண்ட பாசக் கவிதைகள். எனக்குத் தெரிந்து நான் தமிழில் தானாகவே எழுதத் தொடங்கியது இந்த மாதிரி கடிதத்தில் தான்.
என் அப்பாவின் கடிதங்கள் “அன்புச் செல்வன் சதீஷிற்கு” என்று தொடங்கும்.
நேரில் சொல்லிக் கொள்ளாத தன் அன்பையும் எழுத்தில் காட்டுவதாக இருக்கும்.
இதில் எப்போதுமே “நல்லா படிக்கிறியாப்பா” என்று ஒருமுறை கூட வராது.
“மது அருந்துதல் உடல்நலத்திற்கு கேடு, குடிப்பழக்கம் புற்றுநோயை உண்டாக்கும்” போன்ற சட்டபூர்வமான எச்சரிக்கைகளுக்கும் இடமில்லை. அந்த விஷயத்தில் நாங்களே பொறுப்பாய் இருப்போம் என்கிற நம்பிக்கை.
ஒரு முறை ரோல் நம்பர் குளறுபடியில் எனக்கு அடுத்துள்ள மாணவனின் மதிப்பெண் பட்டியலை எங்கள் வீட்டுக்கு அனுப்பி வைக்க, அதில் எனக்கு இரண்டு அரியர்ஸ் என்று இருக்க, அப்பாவின் அடுத்த கடிதத்தில் ஒரே ஆறுதல் மழை. அதற்கு பதிலாய் நான் எழுதிய கடிதத்தில் “அதை எப்படி நீங்கள் நம்பினீர்கள்” எனக் கேட்டு வைக்க, அடுத்து ஒரு கடிதம் அப்பாவிடம் இருந்து வந்தது. “நான் சொத்து எதுவும் சேர்த்து வைக்கவில்லை. என் பிள்ளைகளாகிய நீங்கள் தான் என் சொத்து” என அப்பா உருகி எழுதி இருந்த வரிகள், கொண்டு வந்த நெகிழ்ச்சியை வேறு எது கொண்டு வந்திடும்?

இப்போதெல்லாம், எஸ்.டி.டி பூத் இல்லை. கடிதங்கள் எழுதுவதற்கு தேவையும் இல்லை. அப்பாவும் இல்லை.
appa

கவிதை

எனக்கு கவிதைல்லாம் எழுதிப் பழக்கமில்லை. ஒரு பத்து நாளா, மனசுக்குள்ள …

எனக்கு கவிதைல்லாம் எழுதிப் பழக்கமில்லை.
ஒரு பத்து நாளா, மனசுக்குள்ள ஓடிக்கிட்டு இருந்த ஒரு விஷயத்தை, கொஞ்சம் வார்த்தைகளை மடிச்சு மடிச்சு போட்டு,
கவிதை மாதிரி செஞ்சு இங்கே பதிஞ்சு வைச்சிட்டு, பக்கத்துலயே உட்கார்ந்து காத்திருக்கிறேன்.
வருங்காலத்துல இதைக் கவிதைன்னு யாராச்சும் ஒத்துகிட்டாலும் ஒத்துக்கலாம் 🙂

(கவிதைக்காக படத்தை சுட்ட இடம்…Photo Credit.)

maramandai-kku oor arivurai

தினந்தோறும் இந்த மரத்தடியில்
களைப்பாறும் மனிதன் நான்.
நேற்று மரத்தோடு பேசிய
என் உரையாடல் கேளுங்கள்…

“மரமே ஏ மரமே
பறந்து வரும் பறவைக்கூட்டம்
உன் பழத்தை உண்டுவிட்டு
உன் கிளையிலேயே எச்சமிடும்

நாடி வரும் விலங்குகளும்
உன் இலையைத் தின்றுவிட்டு
உன் காலடியில் சாணமிடும்…

தேடி வரும் மனித இனம்
உன்னை அழித்தேனும்
தன் வீடு கட்டி விடும்.

மரமே ஏ மரமே
ஒன்றுமே சொல்லாமல் ஏன்
ஒதுங்கி நிற்கிறாய்?

உன் வலிமை யாதென்று
ஊருக்கு நீ காட்டு…
கனி கொடுப்பதை
ஒரு வாரம் நிப்பாட்டு…
நிழல் கொடுக்கும் உன் கிளையை
உனக்குள்ளே நீ பூட்டு…
வெட்ட வரும் மனிதனையும்
ஓட ஓட நீ விரட்டு…
இப்படியெல்லாம் செய்தால் தான்
இவர்களுக்கெல்லாம் புத்தி வரும்”

சொல்லிவிட்டு சில நொடிகள்
அமைதியாய்ப் பார்த்திருந்தேன்.
சத்தமில்லா அந்நேரம்
அம்மரமும் பேசியது…
என் வாய்ப்பேச்சு நின்றது.

“பறவைகளோ விலங்குகளோ
தீங்கொன்றும் செய்வதில்லை…
எச்சமிடும் பறவைகளோ
என் விதையைப் பரப்பி விடும்…
இட்டு வைத்த சாணமும்
என் வேருக்கு உரமே ஆகும்..
உங்களுக்குப் புத்தி வர வேண்டும்
என்பதற்காய்
கெட்டவனாய் நான் மாற வேண்டும் என்றுரைத்தால்
அஃதெப்படி நியாயம் ஆகும்?”

நான் பாடிய பாடல்

நானும் ஒரு பாடகன் – இந்த முறை (2013)

சமீபத்தில், அட்லாண்டா மாநகரத் தமிழ்ச் சங்கம் நடத்தி வரும் “நம்ம ஊரு சிங்கர்ஸ்”-இல், நானும் ஒரு பாடகன் என பங்கு கொண்டேன்.

அதில் இருந்து ஒரு சில காணொளிகளை நீங்களும் பார்க்கலாம். குறை நிறைகளைக் கமெண்ட்டினால் மகிழ்வேன். நன்றி.

போற்றிப் பாடடி பொண்ணே – தேவர் மகன் – கிராமியப் பாடல்கள் சுற்று Folk Songs Round

விழி மூடி யோசித்தால் – அயன் – மேற்கத்தியப் பாடல்கள் சுற்று Western Songs Round

அம்மா என்றழைக்காத – மன்னன் – பாரம்பரிய இசைப் பாடல்கள் சுற்று Classical Songs Round

தேனே தென்பாண்டி மீனே – உதய கீதம் – காதிற்கினிய கீதங்கள் சுற்று Melody Songs Round

பிடித்த பாடல்

இது தந்தையின் தாலாட்டு (A Father’s Lullaby)

சில நாட்களுக்கு முன், இசைஞானி இளையராஜா, நியூ ஜெர்ஸிக் கச்சேரியின் இறுதியில் பாடிய பாடலை, யூடியூபில் காணக் கிடைத்தது.
மீண்டும் மீண்டும் கேட்டுப் புளகாங்கிதம் அடைந்தேன்.

கடல்கடந்து வாழ்ந்தாலும், அவர் இசை கடந்து வாழ முடியாத என் போன்ற பல ரசிகர்களின் இதயம் தொட்டு வருடிய பாடலாக அது ஒலித்தது.

“தென்பாண்டிச் சீமையிலே” – பாடலின் மெட்டில், அவரே வேறு வரிகளை அமைத்துப் பாடியிருந்தார்.

ஏழேழு கடல் கடந்து
இங்கு வந்து வாழ்பவரே
என்றென்றும் உனக்கெனவே
இசை கொடுப்பேனே – இசை கொடுப்பேனே…

எங்கோ மண்ணில் பிறந்தாலும்
ஏதோ மண்ணில் வாழ்ந்தாலும்
உனையும் என்னையும் இணைப்பதெல்லாம்
உயிரின் மேலாம் – இசை தானே…

உன் வாழ்வில் சில நொடிகள்
என் வாழ்வில் சில நொடிகள்
என்றென்றும் நினைவில் நிற்கும்
இந்நொடி தானே இந்நொடி தானே…

மீளாத சோகமென்ன
தாளாத துயரமென்ன
சொல்லாமல் துடைப்பதெது
என்னிசை தானே என்னிசை தானே…

ஆ..ஆ…(ஆலாபனை)

தென்பாண்டிச் சீமையிலே
தேரோடும் வீதியிலே
மான் போல வந்தவரை
யாரடிச்சாரோ யாரடிச்சாரோ
வளரும் பிறையே தேயாதே – இனியும்
அழுது தேப்பாதே…
அழுதா மனசு தாங்காதே
அழுதா மனசு தாங்காதே…
தென்பாண்டிச் சீமையிலே
தேரோடும் வீதியிலே
மான் போல வந்தவரை
யாரடிச்சாரோ யாரடிச்சாரோ

நம்மையறியாமல்
நம் கண்களின் ஓரத்தில் கண்ணீரைத் துளிர்க்க வைப்பதும் அவரே
அதைத் துடைப்பதுவும் அவரே!

எனக்குத் தெரிந்தவரை இதுதான் ஒரு தந்தையின் தாலாட்டு.
தன் இசை பலருக்குத் தாலாட்டாய் இருக்கிறது என்பதை அவரும் உணர்ந்தே தான் கொடுத்து வருகிறார்.

மீளாத சோகமென்ன
தாளாத துயரமென்ன
சொல்லாமல் துடைப்பதெது
என்னிசை தானே என்னிசை தானே…

நீங்களும் கேட்டு மகிழுங்கள்.