சினிமா விமர்சனம் · பிடித்த திரைப்படம்

நல்ல படம் இது – என்கிற செவி வழிச் செய்தி, …

Subramaniapuram Movie
நல்ல படம் இது – என்கிற செவி வழிச் செய்தி, படம் வந்த சில நாட்களிலேயே கிடைத்துவிட்டது. அதுதான் படத்திற்கான மொத்த விளம்பரமும் என்று நினைக்கிறேன்.
தற்போதெல்லாம் தமிழ் சினிமாவின் புதுமுக இயக்குனர்கள் பிரமிக்க வைக்கிறார்கள்.
“சித்திரம் பேசுதடி” -யில் மிஷ்கின், “பொல்லாதவன்” – வெற்றிமாறன், என மிரட்டிய இயக்குனர்களின் வரிசையில் தானும் இடம் பிடிக்கிறார் “சுப்ரமணியபுரம்” – சசிகுமார்.

பாதிக்கும் மேற்பட்டவர்கள் புதிய முகங்கள், படத்தின் எதார்த்தமான பின்னணிக்கு மிகவும் உதவுகிறார்கள். இயக்குனர் சசிகுமார், “பரமன்” என்கிற ஒரு கேரக்டராக இந்தப் படத்தில் வாழ்ந்துள்ளார்.
காட்சிகளின் பின்னணியில் தெரியும் அந்தக் காலத்திய சினிமா போஸ்டர், அந்தக் காலத்து ஃபோன் என 1980-களை நம் கண் முன் நிறுத்தும் நேர்த்தியான கலை அமைப்பு [Art Direction] பாராட்டுக்குரியது.

வசனங்களில், மதுரைத் தமிழுடன் எதார்த்தமும் பின்னிப் பிணைந்து காணப்படுகிறது.

இந்தப் படத்தின் “கண்கள் இரண்டால்” பாடல் மிக அருமை, அதுபற்றி ஏற்கெனவே எழுதி இருக்கிறேன். பின்னணியில் ரேடியோவில் ஒலிக்கும் “சிறு பொன் மணி அசையும்” பாடல், சரோஜ் நாராயணசுவாமி வாசிக்கும் செய்திகள் எனப் படத்தின் பின்னணி இசையிலும் கவனத்துடன் செயல் பட்டு இருக்கிறார் அறிமுக இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன்.

படத்தில் நடிப்பு என்று பிரித்து அறியும்படி எதுவும் தெரியாததால், நடித்தவர்களைப் பற்றி எதுவும் சொல்வதற்கில்லை.

மொத்தத்தில் சுப்ரமணியபுரம், எதார்த்தமான மனிதர்களைப் பற்றிய நல்லதொரு திரைப்படம் (சற்றே அதிகமான வன்முறைக் காட்சிகள் இருந்தாலும்).
கிறுக்கல்ஸ்.காம் மதிப்பெண் : 65%

சில சுட்டிகள்.

பிடித்த பாடல்

கண்கள் இரண்டால் – சுப்ரமணியபுரம்

சமீபத்தில் அதிகம் பேசப்படும் படம் – சுப்ரமணியபுரம்.
பாடல் : கண்கள் இரண்டால்.
ஜேம்ஸ் வசந்தன், தொலைக்காட்சியில் நிகழ்ச்சித் தொகுப்பாளராய் இதுவரை அறிந்திருக்கிறோம். முதன் முதலாக இசையமைத்த படம்.
எனக்குப் பிடித்த பாடல் – என்கிற வகைப்பாட்டில் சேர்க்கும்போது ராஜா சாரின் பாடல் ஒன்று நினைவுக்கு வருகிறது.

“பாடல்கள் ஒரு கோடி, எதுவும் புதிதில்லை
ராகங்கள் கோடி கோடி அதுவும் புதிதில்லை”

பாடலை முழுக்க கேட்பதற்குள், ஏற்கெனவே கேட்ட பாடல் போல் தோன்றினால், உங்களுக்கு ஒரு சபாஷ்.
பின்வரும் பாடல்களில் ஏதாவது ஒன்றை முணுமுணுக்கத் தொடங்கிவிட்டால், உங்கள் காலரைத் தூக்கி விட்டுக் கொள்ளலாம்.
தலையைக் குனியும் தாமரையே – ஒரு ஓடை நதியாகிறது – இளையராஜா
சின்னக் கண்ணன் அழைக்கிறான் – கவிக்குயில் – இளையராஜா
அழகான ராட்சசியே – முதல்வன் – ஏ.ஆர்.ரகுமான்
சுடும் நிலவு சுடாத சூரியன் – தம்பி – வித்யாசாகர்

“இதுவா, இது ரீதிகௌளை” என்று சொல்லிவிட்டீர்களோ, உங்கள் முதுகில் நீங்களே ஒருமுறை தட்டிக் கொடுத்துக் கொள்ளலாம்.

பாடலைப் பார்க்க கீழே சொடுக்குங்கள்
Continue reading “கண்கள் இரண்டால் – சுப்ரமணியபுரம்”