சினிமா விமர்சனம்

ஆகஸ்ட் முதல் நாள், அட்லாண்டாவில் இந்த திரைப்படத்தைப் பார்த்தோம். அதற்குப் …

ஆகஸ்ட் முதல் நாள், அட்லாண்டாவில் இந்த திரைப்படத்தைப் பார்த்தோம்.
அதற்குப் பிறகு இன்று தான், கணினியின் முன் அமரும் வாய்ப்பு வந்தது. அதற்குள் படம் ஒரு குப்பை என்கிற விமர்சனம் இணையம் முழுக்க எதிரொலிப்பதைக் கேட்க முடிந்தது.

குசேலன்

  • படத்தின் இறுதிக்கட்டத்தில் பசுபதியின் கன்னத்தில் ஒரு அறை விடுகிறார் ரஜினி.
    “அப்படியே அந்த பி.வாசு கன்னத்திலயும் ஒன்னு போடு தலைவா” என ஒரு ரசிகர் குரல் கொடுக்கிறார். தியேட்டரே கை தட்டி ஆமோதிக்கிறது.
  • படம் முழுக்க காமெடி நடிகர்கள் [வடிவேல், சந்தானம், லிவிங்ஸ்டன், மயில்சாமி, எம்.எஸ்.பாஸ்கர்] என அனைவரும் வந்து கிச்சுகிச்சு மூட்டுகின்றனர்.
    அதற்கெல்லாம் சிரிக்காத மக்களும், பசுபதி ஓடி வந்து கொடுக்கும் கடலை மிட்டாயில் சிரித்து விடுகிறார்கள்.
  • அதே போல திரையில் தோன்றியவுடனே சிரிப்பை ஏற்படுத்திய மற்றொரு நடிகர் பிரபு. அது என்னவோ தெரியவில்லை, அவர் பேசுவதற்கு முன்பே மக்கள் சிரித்துவிடுகிறார்கள். “என்ன கொடுமை சரவணன் இது”.
    இவர்கள் எல்லோரையும் விட சந்தான பாரதியின் காமெடி பரவாயில்லை.
  • வடிவேல் காமெடி என்கிற பெயரில் அடிக்கும் சில கூத்துக்களைப் பார்த்தும் “U” சர்டிபிகேட் கொடுத்த சென்சார் போர்டு என்ன செய்து கொண்டு இருக்கிறது எனப் புரியவில்லை.

படம் எடுப்பதற்கு முன் நடந்திருக்கக் கூடிய ஓர் உரையாடல்.
பசுபதி : “டைரக்டர் சார், இந்தப் படத்தில என்னொட ரோல் என்ன சார்?”
பி.வாசு: “அதெல்லாம் ஒன்னும் பெரிய விஷயமில்லைய்யா…சும்மா வந்துட்டுப் போ, போதும்”
பசுபதி : “அது எப்படி சார், சும்மா வந்துட்டுப் போனா, ஒரே விளக்கெண்ணை மூஞ்சியா இருக்குமே சார்…”
பி.வாசு: “அதுக்காகத் தானேய்யா உன்னை செலக்ட் பண்ணினதே…சும்மா தொணதொணக்காம இருய்யா…”
பசுபதி : “சார், மக்களைப் பத்தி உங்களுக்கு கவலையே இல்லையா?”
பி.வாசு: “மக்களைப் பத்தியெல்லாம் உனக்கென்னைய்யா கவலை…பிரபுவுக்குத் தாலின்னா என்னன்னே தெரியாதுன்னு ‘சின்னதம்பி’ யில ஒரு கதை விட்டேன், அதையே இந்த மக்கள் ஒரு வருஷத்துக்கு ஓட வைக்கலையா?…”

புகைப்படம் நன்றி:Flickr.

Disclaimer:
பசுபதி-யின் நடிப்புத் திறமையைக் குறை கூற முடியாது. ‘கன்னத்தில் முத்தமிட்டால்’ முதல் ‘வெயில்’ வரை, பல்வேறு திரைப்படங்களில் அவரின் நடிப்பைப் பார்த்து வியந்தவன் தான் நான். இந்த குசேலனில் அவரின் பங்கு மிகக் குறைவு என்பதே இந்தப் பதிவின் மூலம் நான் சொல்ல விழைவது.

பிடித்த பாடல்

தேடினேன் தேவ தேவா – அழைக்கிறான் மாதவன்

ஸ்ரீராகவேந்திரா – திரைப்படத்தில், இறுதிக் கட்டத்தில் வருகிறது இந்தப் பாடல்.
ஸ்ரீராகவேந்திரர் சமாதியடையும் தறுவாயில், அவர் பாடுவது போல் தொடங்கி, அவரது சீடர்கள் முடிப்பதுபோல் உள்ள பாடல்.

பாடலைத் தனியாக ஒரு முறை கேளுங்கள். பிறகு படத்துடன் பாருங்கள். பாட்டு முதலில் உருவாக்கப் பட்டதா, இல்லை காட்சிகளைப் பார்த்துவிட்டு, பின்னணி இசை சேர்க்கும்போது ராஜா சார் சேர்த்துவிட்ட பாடலா எனக் குழம்பும் அளவுக்கு, காட்சியுடன் ஒன்றிய ஒரு பாடல்.

முதலில், சமாதி நிலையை அடைவதற்கு முன்னர், ஸ்ரீராகவேந்திரரே பாடுவது போலத் தொடங்குகிறது பாடல். அவர் கண்களில், நீல வண்ணக் கண்ணன் குழலோடு தோன்றி, அவரை “வா” என அழைக்கும் காட்சி தெரிகிறது. மாசில்லாத தூயனுடன் கலக்கும் ஆவல், அவர் குரலில் வெளிப்பட, மென்மையாகப் பாடலைத் தொடங்க “கே.ஜே.யேசுதாஸ்”ஐத் தேர்ந்தெடுக்கிறார் ராஜா சார்.

கண்ணனின் குழலோசைக்குப் பிறகு பாடல் தொடங்குகிறது.

அழைக்கிறான் மாதவன்…ஆநிரை மேய்த்தவன்…
மணிமுடியும் மயிலறகும்
எதிர்வரவும் துதிபுரிந்தேன்…
மாதவா…
கேசவா…
ஸ்ரீதரா…
ஓம்…

இப்போது தான் பாடலில் தாள இசை சேர்கிறது.
அதுவும் சீரான, சற்றே அதிக இடைவெளியில், இறுதிக் கட்டத்தை நெருங்கிவிட்ட ஒரு வாழ்வைக் குறிப்பால் சொல்லும் ஒரு தாளம்.

தேடினேன் தேவ தேவா…தாமரைப் பாதமே…
வாடினேன் வாசு தேவா…வந்தது நேரமே…
ஞான வாசல் நாடினேன்.
வேத கானம் பாடினேன்
கால காலம் நான் உனைத்
தேடினேன் தேவ தேவா…தாமரைப் பாதமே…

காதில் நான் கேட்டது…வேணு கானாமிருதம்…

வேணு கானம் – என்றாலே குழலிசை தானே, அதுதான் ராஜா சார் அங்கே ஒரு சின்னத் துளியாக மெல்லிய குழலோசையை வைத்து இருக்கிறாரோ?

கண்ணில் நான் கண்டது…கண்ணன் பிருந்தாவனம்
மாயனே!
நேயனே!
மாசில்லாத தூயனே..
ஆத்ம ஞானம் அடைந்த பின்னும்
தேடினேன் தேவ தேவா…தாமரைப் பாதமே

இதற்குப் பிறகு ஸ்ரீராகவேந்திரர் இறைவனுடன் ஒன்ற, அவரது சீடர்கள் பாடுவதாகப் பாடல் தொடர்கிறது.
இறைவனுக்கும் பக்தனுக்கும் இருந்த மெல்லிய உறவைச் சொல்லிக் கொண்டு வந்த பாடல், இப்போது சீடர்களுக்கும் குருவிற்கும் இடையேயான பந்தத்தைச் சொல்ல ஆரம்பிக்கிறது.
முதலில் அவர் அருகில் இருக்கும் சீடர்கள் பாடுகிறார்கள். இதற்கு கணிரென்ற குரலுடைய “டி.எல்.மஹாராஜன்”ஐத் தேர்ந்தெடுக்கிறார் ராஜா சார்.

குருவே சரணம்….
குருவே சரணம்…
ராகவேந்திரா ஸ்ரீராகவேந்திரா…
ராகவேந்திரா ஸ்ரீராகவேந்திரா…
ராகவேந்திர ராகவேந்திர ராகவேந்திர ராகவேந்திர…
குருவே சரணம்….
குருவே சரணம்…

இதற்கிடையில், மற்றொரு சீடர் [படத்தில் டெல்லி கணேஷ்], முக்தி நிலை அடைவதற்குள் தன் குருவைத் தரிசிக்க வந்து கொண்டிருக்கிறார். அவருக்குப் பாதையில் சில தடங்கல்கள் நேர்கிறது. அதையெல்லாம் தாண்டி எப்படியாவது குருவைத் தரிசிக்க வேண்டுமே என்கிற பதட்டத்துடன் இருக்கிற இந்த சீடரின் உணர்வைச் சொல்ல ஆரம்பிக்கிறது பாடல்.

ராஜா சார் எத்தனையோ திரைப்படக் காட்சிகளுக்குப் பின்னணி இசை சேர்த்துக் காட்சியில் கதா பாத்திரங்களின் உணர்வை நமக்கு வெளிப்படுத்தி இருக்கிறார். அது அவருக்கு சர்வ சாதாரணம்.
ஆனால் ஒரே பாடலில் இப்படிப் பல உணர்வுகளைக் காட்டுவது சற்று கடினம் தானே.
யேசுதாஸில் தொடங்கி, டி.எல்.மஹாராஜன் பாடும் போதே பாடல் சற்றே உயர்ந்த ஸ்தாயிக்குச் சென்று இருக்கிறது.
இப்போது அது இன்னும் உச்ச ஸ்தாயிக்கு எடுத்து செல்ல வேண்டும்.
இந்த சீடர் குரலாய் ஒலிக்க வேறொருப் பாடகரும் வேண்டும்.
இதற்கு ராஜா சார் தேர்ந்தெடுப்பது “மலேசியா வாசுதேவன்”.

ஞானத் திருமேனி காண வர வேண்டுமே…
சீதப்பூ வண்ணப் பாதம் தொழ வேண்டுமே…
பக்தன் வரும்போது பாதை தடையானதே…
காட்டுப் பெருவெள்ளம் ஆற்றில் உருவானதே…
தாயாகி தயை செய்யும் தேவா…
தடை நீங்க அருள் செய்ய வா வா…
நான் செய்த பாவம் யார் தீர்க்கக் கூடும்…
நீ வாழும் இடம் வந்து நான் சேர வேண்டும்…

காட்சிகள் மாறி, திரும்பவும் ஸ்ரீராகவேந்திரர் இருக்கும் இடத்துக்கு வருகிறோம். சீடர்கள் உச்ச ஸ்தாயியில் தங்கள் குருவின் பெயரை மந்திரம் போல உச்சரிக்கிறார்கள்.

குருவே சரணம்….
குருவே சரணம்…
ராகவேந்திரா ஸ்ரீராகவேந்திரா…
ராகவேந்திரா ஸ்ரீராகவேந்திரா…
ராகவேந்திர ராகவேந்திர ராகவேந்திர ராகவேந்திர…
குருவே சரணம்….
குருவே சரணம்…
ராகவேந்திர ராகவேந்திர ராகவா
குரு ராகவேந்திர ராகவேந்திர ராகவா…

உணர்வுகளை இசையில் கொண்டுவருவதில் ராஜா ராஜா தான். என்ன சொல்கிறீர்கள்?
பாடலைக் கேட்க கீழே க்ளிக்குங்கள்..
[audio:SriRaghavendra-Thedineindevadeva.mp3]

படத்துடன் பார்க்க கீழே க்ளிக்குங்கள்…
YouTube – தளத்தில் ஏற்றிய செந்திலுக்கு நன்றி.
Continue reading “தேடினேன் தேவ தேவா – அழைக்கிறான் மாதவன்”