கவிதை

கல்லெறிதல்

தினம் ஒரு கவிதை என்றொரு யாஹு குழு உண்டு…தற்போது முழு மூச்சாக இயங்கவில்லை எனினும் அதில் நான் ரசித்த கவிதைகள் நிறைய உண்டு…

அதில் சில கவிதைகளை மீண்டும் பதிப்பிக்கிறேன் உங்களுக்காக.

கல்லெறிதல்

சாலையைச் செப்பனிடுவதற்காக
கொட்டப்பட்ட மணலில் தான்
கோவில் கட்டி விளையாடுவோம்

கலசத்திற்கு பதிலாக
ஒரு கொத்து காட்டாமினுக்கை
நட்டுவைப்போம்

நடுவிலொரு குழி பிரித்து
உருண்டையாய் களி மண்ணைப் பிடித்து
கர்ப்பக் கிரகம் அமைப்போம்.

காகிதப் பூவால் அலங்கரித்து
கன்னத்தில் போட்டுக் கொள்வோம்
சப்புக் கொட்டி.

எதன் பொருட்டாவது
கலைய நேரிடும்.,
மீண்டும் வந்து பார்க்க,
கலசத்தில் பட்டிருக்கும் நீரபிஷேகத்தில்
சற்றே கலைந்திருக்கும் அதன் உரு.
சோகத் தூவானமாய்க் கண்கள் அரும்பும்.

கோயிலைச் சிதைத்த நாயின் மீது
கல் விட்டெறிவர்
ஹமீதும் பீட்டரும்.

– எழுதியவர் : யுக பாரதி
– கவிதை வெளியானது : தினம் ஒரு கவிதை
– வெளியான தேதி : 26-02-2004

6 thoughts on “கல்லெறிதல்

  1. A Good verse from Yugabharathi…. Arumaiyana karuthu…Azhana nadai… Elimaiyana vaarthi prayoham… Miga Arumai… Vaazhthukkal…..

    Anbudan

    Krishh…
    (Anandhakrishnan)

    Like

  2. அருமையான கவிதை, ஹைக்கூவினை ஒத்த கவிதை

    Like

Comments are closed.