என்னவென்று சொல்வது

ஜென் தத்துவக் கதைகள் அடங்கிய ஒரு PDF கோப்பைப் படித்துக் …

ஜென் தத்துவக் கதைகள் அடங்கிய ஒரு PDF கோப்பைப் படித்துக் கொண்டிருந்தேன்.
ஒரே ஜென் கதையைப் பலவேறு வடிவங்களில் நீங்கள் படித்திருக்கக் கூடும். ஒவ்வொருவர் அந்தக் கதையைக் கூறும்போதும் ஏதாவது கொஞ்சம் திரிபு இருக்க வாய்ப்பிருக்கிறது.
அதில் ஒரு கதை இப்படிப் போகிறது.

ஒரு கல்லூரிப் பேராசிரியர் ஒரு ஜென் துறவியை சந்தித்துப் பேசுகிறார். ஜென் துறவி அவருக்கு ஒரு கோப்பையில் தேனீரை ஊற்றுகிறார். தேனீர் கோப்பையின் விளிம்பு வரை வந்துவிட்டது. துறவியோ நிறுத்தாமல் இன்னமும் ஊற்றியபடி இருக்கிறார்.
பேராசிரியர் பதட்டமாக “கோப்பை நிறைந்து இருக்கிறது. இதற்கு மேல் எவ்வளவு ஊற்றினாலும் அது தங்காது. வழிந்து வெளியேறிவிடும்.” என்கிறார்.
துறவி நிதானமாக “நீயும் இந்தக் கோப்பை போல தான் இருக்கிறாய்; முதலில் உன் கோப்பையைக் காலியாக்கு, அதற்குப் பின் நாம் ஜென் பற்றிப் பேசுவோம்” என்கிறார்.

இதைப் படித்துக் கொஞ்ச நேரத்தில், யதேச்சையாய், ராஜா சார், கல்கி இதழுக்கு, 1997-இல் கொடுத்த ஒரு பேட்டியின் PDF வடிவத்தைப் படிக்க நேர்ந்தது.
அதில் ராஜா சார் இந்தக் கதையின் சாரத்தையே குறிப்பிடுகிறார்.

இளையராஜாசினிமா என்பது ஒருவித ஃபார்முலாவாகப் பழகிப் போன விஷயம்.இதற்குத் தான் மக்கள் தலையாட்டுவார்கள்.
என்னிடம் கொண்டுவரப்படுகிற பாத்திரம் காலியாக இருந்தால் தானே நான் அதில் ஏதாவது போட முடியும்?
நீங்கள் கொண்டுவருகிற போதே, அதில் எதையாவது போட்டு நிரப்பித்தான் கொண்டுவருகிறீர்கள். அதற்கு மேலும் அதில் நான் எதைப் போட முடியும்?

முழுப் பேட்டியையும் படிக்கக் கீழே கிளிக்குங்கள்.
கல்கியில் வெளிவந்த இளையராஜாவின் பேட்டி – PDF வடிவில்.

சுஜாதா

பாடப் புத்தகங்கள் தவிர்த்து, மற்ற புத்தகங்களை நான் படிக்க ஆரம்பித்த …

பாடப் புத்தகங்கள் தவிர்த்து, மற்ற புத்தகங்களை நான் படிக்க ஆரம்பித்த போது ஆறாவதோ ஏழாவதோ படித்துக் கொண்டிருந்தேன். ஆரம்ப காலத்தில் படித்தது முக்கால் வாசி கதைகளும் நாவல்களும்.

சுவாமிமலை அரசு நூலகத்தில் அப்போது நான் உறுப்பினராவதற்காய், தலைமையாசிரியரிடம் கையெழுத்து வாங்கி வந்தது ஞாபகம் இருக்கிறது.
அரசு நூலகத்தில் அதிகம் கிடைத்தது சிவசங்கரி, லக்ஷ்மி, ஜெயகாந்தன் மற்றும் தி.ஜானகிராமன்.
பட்டுக்கோட்டை பிரபாகர், ராஜேஷ் குமார், சுபா போன்றவர்களின் கிரைம் நாவல்கள் அங்கே கிடைக்காது. அதெல்லாம் தின வாடகைக்கு [ஒரு நாளைக்கு 25 காசு] செட்டியார் கடையில் வாங்கிப் படித்தது.

இப்படி ஏதோ ஒரு நாளில், எங்கேயோ என் கண்ணில் சிக்கியது ஒரு சுஜாதாவின் நாவல்.
கேட்டார்ப் பிணிக்கும் தகையவாய் கேளாரும்
வேட்ப மொழிவதாம் சொல்.

இது சொல்லுக்கு மட்டுமல்ல, நல்ல எழுத்துக்கும் அஃதே இலக்கணம்.
முதல் நாவலிலேயே படித்தவரை பிணைத்துவிடக் கூடிய எழுத்து.
மிக முக்கியமாகக் கவர்ந்தது, கதையைப் படிப்பவருடன் நேரடியாகப் பேசுவது போன்ற த்வனியில் எழுதும் சுஜாதாவின் நடை.
எடுத்த எடுப்பிலேயே “நீங்கள் குப்புசாமியோ, ராமசாமியோ, இப்ராஹிமோ, பீட்டரோ யாராக வேண்டுமானாலும் இருந்து கொள்ளுங்கள்” என்பது போல தொடங்குவார்.

அவரது எழுத்து நடை, படிப்பவர் ஒவ்வொருவருடனும் சொல்லப் படாத ஓர் அன்னியோன்னியத்தை தானாகவே உருவாக்கிக் கொள்கிறது. பல ஆண்டுகளுக்கு முன் அவர் எழுதிய கதைகளை இப்போது படித்தாலும் அது வெளிப்படுகிறது.

அதெல்லாம் சரி, இந்தப் பதிவு எழுத என்ன காரணம்?

சுஜாதாவைப் போல எழுதக் கூடியவர்கள் வரலாம். சுஜாதா போல, கற்றதும் பெற்றதும் தருவதற்கு இப்போதைக்கு யாரும் இல்லை.
நல்ல கவிதைகளை, ஹைக்கூக்களை, வெண்பாக்களை அவர் போல தெரிந்தெடுத்துப் பகிர்ந்து கொள்ள யாருமில்லை. ‘கற்றதும் பெற்றதுமி’ல் அவர் சுட்டிக்காட்டிய சில நல்ல கவிதைகளைக் கீழே பதிக்கிறேன். நீங்கள் படியுங்கள்.

கண்ணீரைப் படைத்தது
கடவுளின் தவறா
ஆனந்தப்பட்டு
அதை வடிக்காமல்
அழுது வடிக்கும்
மனிதனின் தவறா?
நீலமணி

புறாக்கள் வளர்க்கும்
எதிர் வீட்டுக்காரர்
என்னிடமிருந்து பறிக்கிறார்
பூனை வளர்க்கும் சுதந்திரத்தை.
நா.முத்துக்குமார்

சுஜாதா – வி மிஸ் யூ.

சினிமா விமர்சனம் · பிடித்த திரைப்படம்

நல்ல படம் இது – என்கிற செவி வழிச் செய்தி, …

Subramaniapuram Movie
நல்ல படம் இது – என்கிற செவி வழிச் செய்தி, படம் வந்த சில நாட்களிலேயே கிடைத்துவிட்டது. அதுதான் படத்திற்கான மொத்த விளம்பரமும் என்று நினைக்கிறேன்.
தற்போதெல்லாம் தமிழ் சினிமாவின் புதுமுக இயக்குனர்கள் பிரமிக்க வைக்கிறார்கள்.
“சித்திரம் பேசுதடி” -யில் மிஷ்கின், “பொல்லாதவன்” – வெற்றிமாறன், என மிரட்டிய இயக்குனர்களின் வரிசையில் தானும் இடம் பிடிக்கிறார் “சுப்ரமணியபுரம்” – சசிகுமார்.

பாதிக்கும் மேற்பட்டவர்கள் புதிய முகங்கள், படத்தின் எதார்த்தமான பின்னணிக்கு மிகவும் உதவுகிறார்கள். இயக்குனர் சசிகுமார், “பரமன்” என்கிற ஒரு கேரக்டராக இந்தப் படத்தில் வாழ்ந்துள்ளார்.
காட்சிகளின் பின்னணியில் தெரியும் அந்தக் காலத்திய சினிமா போஸ்டர், அந்தக் காலத்து ஃபோன் என 1980-களை நம் கண் முன் நிறுத்தும் நேர்த்தியான கலை அமைப்பு [Art Direction] பாராட்டுக்குரியது.

வசனங்களில், மதுரைத் தமிழுடன் எதார்த்தமும் பின்னிப் பிணைந்து காணப்படுகிறது.

இந்தப் படத்தின் “கண்கள் இரண்டால்” பாடல் மிக அருமை, அதுபற்றி ஏற்கெனவே எழுதி இருக்கிறேன். பின்னணியில் ரேடியோவில் ஒலிக்கும் “சிறு பொன் மணி அசையும்” பாடல், சரோஜ் நாராயணசுவாமி வாசிக்கும் செய்திகள் எனப் படத்தின் பின்னணி இசையிலும் கவனத்துடன் செயல் பட்டு இருக்கிறார் அறிமுக இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன்.

படத்தில் நடிப்பு என்று பிரித்து அறியும்படி எதுவும் தெரியாததால், நடித்தவர்களைப் பற்றி எதுவும் சொல்வதற்கில்லை.

மொத்தத்தில் சுப்ரமணியபுரம், எதார்த்தமான மனிதர்களைப் பற்றிய நல்லதொரு திரைப்படம் (சற்றே அதிகமான வன்முறைக் காட்சிகள் இருந்தாலும்).
கிறுக்கல்ஸ்.காம் மதிப்பெண் : 65%

சில சுட்டிகள்.

பிடித்த பாடல்

யுவன்சங்கர் ராஜாவின் இசையில், ராஜா சார் சில அற்புதமான பாடல்களைப் …

யுவன்சங்கர் ராஜாவின் இசையில், ராஜா சார் சில அற்புதமான பாடல்களைப் பாடி இருக்கிறார்.
யுவன்சங்கர் ராஜாவிற்கு நன்றாய்த் தெரிந்திருக்கிறது, எந்த சிச்சுவேஷனுக்கு ராஜா சாரின் குரல் பொருத்தமாய் இருக்கும் என்று. வேறு யாருடைய இசையிலும், ராஜா சார் பாடியதாகத் தெரியவில்லை.

“எங்கெங்கோ கால்கள் செல்லும் பாதையில்” – நந்தா
“நம்ம காட்டுல மழ பெய்யுது” – பட்டியல்
“அறியாத வயசு, புரியாத மனசு” – பருத்திவீரன்
“பறவையே எங்கு இருக்கிறாய்?” – கற்றது தமிழ்

எல்லாப் பாடல்களையும் தனித் தனியாய் அலசலாம், ஆனால் இந்தப் பதிவில் நான் பேச விரும்புவது சமீபத்தில் எனது ஐஃபோனில் அதிகமாக கேட்கப்பட்ட பாடலில் சேர்ந்து கொண்ட, கவிஞர் நா.முத்துக்குமார் எழுதிய, “பறவையே எங்கு இருக்கிறாய்?” பாடல் பற்றி.

பறவையே எங்கு இருக்கிறாய்?
பறக்கவே என்னை அழைக்கிறாய்,
தடயங்கள் தேடி வருகிறேன் அங்கே…
பறவையே எங்கு இருக்கிறாய்?
பறக்கவே என்னை அழைக்கிறாய்,
தடயங்கள் தேடி வருகிறேன் அங்கே…

அடி என் பூமி தொடங்கும் இடம் எது? நீ தானே!!
அடி என் பாதை இருக்கும் இடம் எது? நீ தானே!!!
பார்க்கும் திசைகளெல்லாம் பாவை முகம் வருதே,
மீன்கள் கானலின் நீரில் தெரிவதுண்டோ?
கண்கள் பொய்கள் சொல்வதுண்டோ?

நீ போட்ட கடிதத்தின் வரிகள் கடலாக,
அதில் மிதந்தேனே பெண்ணே நானும் படகாக….
(பறவேயே…)

உன்னோடு நானும் போகின்ற பாதை
இது நீளாதோ தொடு வானம் போலவே!
கதை பேசிக் கொண்டே வா காற்றோடு போவோம்
உரையாடல் தீர்ந்தாலும் உன் மௌனங்கள் போதும்.
இந்த புல் பூண்டும் பறவை நாமும் போதாதா?
இனி பூலோகம் முழுதும் அழகாய்ப் போகாதா?

முதல் முறை வாழப் பிடிக்குதே!
முதல் முறை வெளிச்சம் பிறக்குதே!
முதல் முறை முறிந்த கிளையொன்று பூக்குதே…..!

முதல் முறை கதவு திறக்குதே!
முதல் முறை காற்று வருகுதே!
முதல் முறை கனவு பலிக்குதே அன்பே…..!

(பறவையே)

ஏழை…காதல்….
மலைகளில் தனில் தோன்றுகின்ற ஒரு நதியாமோ……
மண்ணில்..விழுந்தும் ஒரு காயமின்றி…
உடையாமல் உருண்டோடும் நதியாகிடுதோ….

இதோ இதோ இந்தப் பயணத்திலே
இது போதும் கண்மணி,
வேறென்ன நானும் கேட்பேன்?
பிரிந்தாலும் மனதிலே இந்த நொடியில் என்றும் வாழ்வேன்…!

இந்த நிகழ்காலம் இப்படியே தான் தொடராதா?…
என் தனியான பயணங்கள் இன்றுடன் முடியாதா?…

முதல் முறை வாழப் பிடிக்குதே!
முதல் முறை வெளிச்சம் பிறக்குதே!
முதல் முறை முறிந்த கிளையொன்று பூக்குதே…..!

முதல் முறை கதவு திறக்குதே!
முதல் முறை காற்று வருகுதே!
முதல் முறை கனவு பலிக்குதே அன்பே…..!

ராஜா சாரின் தன் குரலில் ஒவ்வொரு வரிக்குள்ளும் எத்தனை உணர்ச்சிகளை உள்ளடக்கி இருக்கிறார், அதுவும் அந்த “முதல் முறை” வரிகள் ஒவ்வொன்றும், எவ்வளவு மெருகுடன் வெளிவருகிறது பாருங்கள். Wow…What an awesome rendition!

முழுப்பாடலையும் கேட்க கீழே கிளிக்குங்கள்.
பறவையே எங்கு இருக்கிறாய்?
[audio:paravaiye-engu-irukkiraai.mp3]

என்னவென்று சொல்வது · பிடித்த பாடல்

சமீப காலத்தில், நான் அதிகம் எதிர்பார்க்கும் ஒரு திரைப்படம் “நான் …

சமீப காலத்தில், நான் அதிகம் எதிர்பார்க்கும் ஒரு திரைப்படம் “நான் கடவுள்”.

இயக்குனர் பாலாவின் ரசிகன் என்பது மட்டுமல்ல காரணம், பின்னணி இசையில் தலைவர் ராஜா சார் என்னென்ன மாயங்கள் செய்திருப்பாரோ என்கிற ஆர்வமும் தான்.
எனக்குத் தெரிந்த வரை, படத்தில் ஒரே ஒரு பாடல் தான். அதுவும் கிட்டத்தட்ட 15 நிமிடங்களுக்கு. மற்றபடி, பின்னணி இசை சேர்க்கும்போது தலைவர் ஏதாச்சும் சேர்த்துவிடுவார் எப்படியும்.

சேது படம் வந்த போது சென்னையில் இருந்தேன். படத்தில் விக்ரம் நடிப்பைப் பாராட்டி, ஹிந்து பத்திரிக்கையில் வெளிவந்து இருந்தது. அதனால், அப்படி என்னதான் இருக்கிறது என்று பார்ப்பதற்காக, தேடிப் பிடித்து, எக்மோரில் ஒரு தியேட்டரில் போய்ப் பார்த்ததாய் ஞாபகம்.
இடைவேளையைக் கடந்து படம் ஓடிக்கொண்டு இருக்கிறது. பச்சை நிற உடையில், மன நோயாளிகள் நிறைந்த அந்த மடத்தினுள்ளே நம்மை நடத்திச் செல்லும் காமரா. அப்போது ஆரம்பிக்கும் தலைவர் குரலில் அந்தப் பாடல், “எங்கே செல்லும் இந்தப் பாதை..யாரோ யாரோ அறிவார்….”
நெஞ்சைப் பிசையும் பாடல்-னு சொல்லுவாங்களே, அந்த வகைல நம்பர் ஒன் அது.
எங்கே செல்லும் இந்தப் பாதை
[audio:enge-sellum.mp3]

அதே மாதிரி பிதாமகன் படத்தில், பின்னணி இசையில் சேர்க்கப்பட்ட பாடல் தான் “யாரது யாரது மனசத் திறந்தது..திறந்தது…” உருக்கிவிடும் கேட்பவரை. கேட்டுப் பாருங்கள்.
பிதாமகன் பின்னணி இசைப் பாடல்
[audio:yaarathu.mp3]

இது போல ஏதாச்சும் ஒன்று கட்டாயம் இருக்கும் “நான் கடவுள்” ல. சரியா?

சினிமா விமர்சனம்

ஆகஸ்ட் முதல் நாள், அட்லாண்டாவில் இந்த திரைப்படத்தைப் பார்த்தோம். அதற்குப் …

ஆகஸ்ட் முதல் நாள், அட்லாண்டாவில் இந்த திரைப்படத்தைப் பார்த்தோம்.
அதற்குப் பிறகு இன்று தான், கணினியின் முன் அமரும் வாய்ப்பு வந்தது. அதற்குள் படம் ஒரு குப்பை என்கிற விமர்சனம் இணையம் முழுக்க எதிரொலிப்பதைக் கேட்க முடிந்தது.

குசேலன்

  • படத்தின் இறுதிக்கட்டத்தில் பசுபதியின் கன்னத்தில் ஒரு அறை விடுகிறார் ரஜினி.
    “அப்படியே அந்த பி.வாசு கன்னத்திலயும் ஒன்னு போடு தலைவா” என ஒரு ரசிகர் குரல் கொடுக்கிறார். தியேட்டரே கை தட்டி ஆமோதிக்கிறது.
  • படம் முழுக்க காமெடி நடிகர்கள் [வடிவேல், சந்தானம், லிவிங்ஸ்டன், மயில்சாமி, எம்.எஸ்.பாஸ்கர்] என அனைவரும் வந்து கிச்சுகிச்சு மூட்டுகின்றனர்.
    அதற்கெல்லாம் சிரிக்காத மக்களும், பசுபதி ஓடி வந்து கொடுக்கும் கடலை மிட்டாயில் சிரித்து விடுகிறார்கள்.
  • அதே போல திரையில் தோன்றியவுடனே சிரிப்பை ஏற்படுத்திய மற்றொரு நடிகர் பிரபு. அது என்னவோ தெரியவில்லை, அவர் பேசுவதற்கு முன்பே மக்கள் சிரித்துவிடுகிறார்கள். “என்ன கொடுமை சரவணன் இது”.
    இவர்கள் எல்லோரையும் விட சந்தான பாரதியின் காமெடி பரவாயில்லை.
  • வடிவேல் காமெடி என்கிற பெயரில் அடிக்கும் சில கூத்துக்களைப் பார்த்தும் “U” சர்டிபிகேட் கொடுத்த சென்சார் போர்டு என்ன செய்து கொண்டு இருக்கிறது எனப் புரியவில்லை.

படம் எடுப்பதற்கு முன் நடந்திருக்கக் கூடிய ஓர் உரையாடல்.
பசுபதி : “டைரக்டர் சார், இந்தப் படத்தில என்னொட ரோல் என்ன சார்?”
பி.வாசு: “அதெல்லாம் ஒன்னும் பெரிய விஷயமில்லைய்யா…சும்மா வந்துட்டுப் போ, போதும்”
பசுபதி : “அது எப்படி சார், சும்மா வந்துட்டுப் போனா, ஒரே விளக்கெண்ணை மூஞ்சியா இருக்குமே சார்…”
பி.வாசு: “அதுக்காகத் தானேய்யா உன்னை செலக்ட் பண்ணினதே…சும்மா தொணதொணக்காம இருய்யா…”
பசுபதி : “சார், மக்களைப் பத்தி உங்களுக்கு கவலையே இல்லையா?”
பி.வாசு: “மக்களைப் பத்தியெல்லாம் உனக்கென்னைய்யா கவலை…பிரபுவுக்குத் தாலின்னா என்னன்னே தெரியாதுன்னு ‘சின்னதம்பி’ யில ஒரு கதை விட்டேன், அதையே இந்த மக்கள் ஒரு வருஷத்துக்கு ஓட வைக்கலையா?…”

புகைப்படம் நன்றி:Flickr.

Disclaimer:
பசுபதி-யின் நடிப்புத் திறமையைக் குறை கூற முடியாது. ‘கன்னத்தில் முத்தமிட்டால்’ முதல் ‘வெயில்’ வரை, பல்வேறு திரைப்படங்களில் அவரின் நடிப்பைப் பார்த்து வியந்தவன் தான் நான். இந்த குசேலனில் அவரின் பங்கு மிகக் குறைவு என்பதே இந்தப் பதிவின் மூலம் நான் சொல்ல விழைவது.

சுற்றம்

கே.ஜே.யேசுதாஸின் ரசிகர் வலைப்பதிவு

கே.ஜே.யேசுதாஸ் – தமிழ் சினிமா இசையில், தலைவர் ராஜா சார் மட்டுமல்ல, மற்ற இசையமைப்பாளர்கள் இசையிலும் பல நல்ல பாடல்கள் இவர் குரல் வழி வந்து இருக்கின்றன.
“கண்ணே கலைமானே”, “அம்மா என்றழைக்காத”, “காக்கைச் சிறகினிலே நந்தலாலா”, “மனிதா மனிதா இனி உன் விழிகள்”, என சொல்லிக் கொண்டே போகலாம்.

“ஏதோ ராகம் எனது குரலின் வழி
தாளம் பாவம் இரண்டும் இணைந்து வர
கேட்கும் யாரும் உருகி உருகி விழ
காதில் பாயும் புதிய கவிதை இது”

இவர் பாடிய “ஏழிசை கீதமே” என்ற பாடலின் வரிகள் இவை.

சமீபத்தில் இவரது ரசிகர் ஒருவரின் வலைப்பதிவைப் படிக்க நேர்ந்தது. நீங்களும் படித்து ரசியுங்கள்.

பிடித்த திரைப்படம்

குணா திரைப்படப் பின்னணி இசை

குணா – திரைப்படமும், தளபதி திரைப்படமும் ஒரே நேரத்தில் வெளியிடப்பட்ட இரண்டு திரைப்படங்கள்.
இரண்டுமே ராஜா சாரின் இசையில், மிகச் சிறந்த பாடல்கள் மட்டுமன்றி, அருமையான பின்னணி இசையும் உள்ள திரைப்படங்கள்.
புதிதாக வரும் ஒவ்வொரு இசையமைப்பாளரும் அவசியம் கவனித்துக் கற்றுக்கொள்ள வேண்டிய பல விஷயங்கள் இந்த படங்களின் பின்னணி இசையில் பொதிந்து உள்ளன.

சமீபத்தில் ரேடியோஸ்பதியின் வலைப்பதிவில், இந்த பதிவைப் படித்து, கேட்டு ரசித்தேன். நீங்களும் கேளுங்கள்.
குணா பின்னணி இசைத் தொகுப்பு.

பிடித்த பாடல்

கண்கள் இரண்டால் – சுப்ரமணியபுரம்

சமீபத்தில் அதிகம் பேசப்படும் படம் – சுப்ரமணியபுரம்.
பாடல் : கண்கள் இரண்டால்.
ஜேம்ஸ் வசந்தன், தொலைக்காட்சியில் நிகழ்ச்சித் தொகுப்பாளராய் இதுவரை அறிந்திருக்கிறோம். முதன் முதலாக இசையமைத்த படம்.
எனக்குப் பிடித்த பாடல் – என்கிற வகைப்பாட்டில் சேர்க்கும்போது ராஜா சாரின் பாடல் ஒன்று நினைவுக்கு வருகிறது.

“பாடல்கள் ஒரு கோடி, எதுவும் புதிதில்லை
ராகங்கள் கோடி கோடி அதுவும் புதிதில்லை”

பாடலை முழுக்க கேட்பதற்குள், ஏற்கெனவே கேட்ட பாடல் போல் தோன்றினால், உங்களுக்கு ஒரு சபாஷ்.
பின்வரும் பாடல்களில் ஏதாவது ஒன்றை முணுமுணுக்கத் தொடங்கிவிட்டால், உங்கள் காலரைத் தூக்கி விட்டுக் கொள்ளலாம்.
தலையைக் குனியும் தாமரையே – ஒரு ஓடை நதியாகிறது – இளையராஜா
சின்னக் கண்ணன் அழைக்கிறான் – கவிக்குயில் – இளையராஜா
அழகான ராட்சசியே – முதல்வன் – ஏ.ஆர்.ரகுமான்
சுடும் நிலவு சுடாத சூரியன் – தம்பி – வித்யாசாகர்

“இதுவா, இது ரீதிகௌளை” என்று சொல்லிவிட்டீர்களோ, உங்கள் முதுகில் நீங்களே ஒருமுறை தட்டிக் கொடுத்துக் கொள்ளலாம்.

பாடலைப் பார்க்க கீழே சொடுக்குங்கள்
Continue reading “கண்கள் இரண்டால் – சுப்ரமணியபுரம்”

என்னவென்று சொல்வது · சிறுகதை

சிறில் அலெக்ஸ் நடத்தும் அறிவியல் சிறுகதைப் போட்டி

சிறில் அலெக்ஸ் மீண்டும் ஒரு சிறுகதைப் போட்டியைத் தொடங்கி இருக்கிறார்.
இந்த முறை அறிவியல் புனைகதைகளுக்கான போட்டி.
அவசியம் கலந்துகொள்ளுங்கள். முடிந்தால் நானும் வருகிறேன்.