சர சர சாரக் காத்து…sara sara saara kaathu

சமீபத்தில் வரப்போகும் ‘வாகை சூட வா” திரைப்படத்திற்காக, வைரமுத்துவின் வரிகள், அறிமுக இசையமைப்பாளர் எம்.கிப்ரனின் இசையில், சின்மயியின் இனிய குரலில் வந்திருக்கும் சிறப்பான பாடல்.

கதாநாயகியிடம் இருக்கும் ஒரு குறும்பு மற்றும் காதலை, கிராமிய மணத்துடன் வெளிக்கொணர்ந்த வைரமுத்துவின் வரிகள் சிறப்பானவை. இந்தப் பாடல் குறித்து சின்மயி அவரது வலைப்பூவில் குறிப்பிட்டுள்ளார். இணையத்தில் பல இடங்களில் இதன் தங்கிலீஷ் லிரிக்ஸ் காணப்பட்டது. அதைத் தமிழில் கொடுக்கலாம் என்ற ஆர்வத்தில் இந்தப் பதிவை எழுதுகிறேன். ஆனாலும் சில வார்த்தைகள் சரியாகப் புரியவில்லை. தெரிந்தவர்கள் கமெண்டுங்கள்.

சர சர சாரக் காத்து வீசும்போது
சாரப் பாத்து பேசும்போது
சாரப் பாம்பு போல நெஞ்சு சத்தம் போடுதே…(2)

இத்து…இத்து இத்துப் போன நெஞ்சைத் தைக்க
ஒத்தப் பார்வ பாத்துச் செல்லு
மொத்த சொத்தும் எழுதித் தாரேன்
மூச்சு உட்பட…(2)

டீ…. போல நீ என்னை ஏன் ஆத்துறே…
(சர சர)
எங்க ஊரு பிடிக்குதா…எங்க தண்ணி இனிக்குதா
சுத்தி வரும் காத்துல…சுட்ட ஈரல் மணக்குதா
முட்ட கோழி பிடிக்கவா? முறைப்படி சமைக்கவா?
எலும்புகள் கடிக்கையில் என்னைக் கொஞ்சம் நினைக்கவா?

கம்பஞ்சோறு ருசிக்க வா…சமைச்ச கைய கொஞ்சம் ரசிக்க வா
மொடைக்கத்தான் ரசம் வச்சி மடக்கத்தான் பாக்குறேன்
ரெட்டை தோச சுட்டு வச்சி காவ காக்குறேன்..
முக்கண்ணு நுங்கு நான் விக்குறேன்
மண்டு நீ கங்கே(kangu) ஏன் கேக்குறே?

(சர சர)
புல்லுக்கட்டு வாசமா புத்திக்குள்ளே வீசுற
மாட்டு மணி சத்தமா மனசுக்குள் கேக்குற
கட்ட வண்டி ஓட்டுறே கையளவு மனசுலே
கையெழுத்துப் போடுற கன்னிப் பொண்ணு மார்புல

மூனு நாளாப் பாக்கல…ஊரில் எந்தப் பூவும் பூக்கல
ஆட்டுக்கல்லு குழியில உறங்கிப்போவும் பூனைய்யா…
வந்து வந்து பாத்து தான் கிறங்கிப் போறேன்யா…

மீனுக்கு ஏங்குற கொக்கு நீ…
கொத்தவே தெரியல மக்கு நீ…
(சர சர)

காட்டு மல்லிகை பூத்திருக்குது காதலா காதலா
வந்து வந்து ஓடிப்போகும் வண்டுக்கென்ன காச்சலா…

போறானே போறானே (Poraaney Poraaney)

சமீபத்தில் இந்தப் பாடலைக் கேட்க நேர்ந்தது. புதிய இசையமைப்பாளர் எம்.கிப்ரன் என்பவரின் இசையமைப்பில், ரஞ்சித் மற்றும் நேஹாவின் குரல்களில் மிக இனிமையாக ஒலிக்கிறது.
நீங்களும் கேட்டு ரசிக்க, உங்களுக்காக இங்கே…

Listen to போறானே போறானே (Poraaney Poraaney)

Listen to

எனது வார்ப்புரு [My WordPress Theme]

மதுரை மாவட்ட ஆட்சியர் எழுதும் இணைய வலைப்பூ, என்னுடைய மிஸ்டி லுக் வார்ப்புருவைப் பயன்படுத்துவதைக் கண்டு மிக்க மகிழ்ச்சி.
http://thoduvanam.com/tamil/
அவரின் இந்த முயற்சி வெற்றி பெற என் வாழ்த்துக்கள்.

வார்த்தைகளை சர்பத்தில் கரைத்து

2010-இல் உலகம் எப்படியிருக்கும் என்று சில கற்பனைகளை, 2005-இல் எழுதி இருக்கிறார் எழுத்தாளர் சுஜாதா..

2010 என்பது அருகிலும் இல்லாத, தூரத்திலும் இல்லாத ஒரு ரெண்டுங்கெட்டான் எதிர்காலம். அதைப் பற்றி எழுதுவது ‘நிஜமாவதற்கும் பொய்த்துப் போவதற்கும் சம சாத்தியங்கள் உள்ளன.
புள்ளி விவரங்களை மட்டும் கவனித்து எதிர் நீட்டினால் 2010ல்
- செல் ஃபோன்கள் இரட்டிப்பாகும்.
- மக்கள் தொகை 118 கோடியாகும்.
- —
- அலுவலகத்தில் செய்வது அத்தனையும் செல்ஃபோனில் செய்ய முடியும்.
- கவிதைத் தொகுப்புகளில் காதல் குறையும்.
- வாரப் பத்திரிகைகளில் தொடர்கதைகளும் சிறுகதைகளும் அறவே நீக்கப்பட்டு, முழுக்க முழுக்கப் பெண்கள் படங்களாக, ஒரிரண்டு வாக்கியங்களுடன் வெளிவரும்
- புத்தகங்கள் குறையும்.
- மருத்துவமனைகளில் இடம் போதாது…
இவ்வாறு சொல்லிக் கொண்டே போகலாம். பிரச்சனை என்னவென்றால் 2010ல் நான் பிழைத்திருந்து, ‘என்னய்யா.. அப்படிச் சொன்னார், நடக்கவில்லையே’ என்று என் வார்த்தைகளை சர்பத்தில் கரைத்து குடிக்கக் காத்திருபார்கள். வயிற்றைப் புரட்டும்.

முழுப் பட்டியல் இங்கே கிடைக்கும்.
வாவ்…He is such a genius!

வெளிநாட்டில் வாழ்க்கை

வெளிநாட்டில் வாழ்க்கை சொகுசாய் இருப்பது போல் தோன்றும்.
ஆனால் ஓர் இழப்போ துக்கமோ வரும் வேளையில் சேர்ந்து அழ ஆளில்லாமல் துவளும்போது தெரியும் வெளிநாட்டில் வாழ்வதில் உள்ள வலி.
நான் இந்த வலியை உணர்ந்தும் இருக்கிறேன், ஆனால் தெளிவாக இந்த உணர்வுகளை எழுத்தில் கொண்டு வர முயன்றதில்லை.
அதை கீதா ரவிச்சந்திரன் என்பவர் தனது இழப்பு என்கிற பதிவில் செய்திருக்கிறார்.

இத்தகைய இழப்புக்கள் நமக்குள் ஏற்படுத்தும் பாதிப்புகளை யாரிடம் சொல்லி புரிய வைக்க முடியும்?
நாம் நேரில் செல்லவில்லை என்ற காரணத்தினால் நமக்கு பாதிப்பு இல்லை என்று அர்த்தமில்லை. மனித இழப்புக்களுக்கு தொலைபேசியில் ஆறுதல் கூறுவது எவ்வளவு தூரம் ஆறுதல் அளிக்கும்?

மிஷ்கினின் நந்தலாலா

வெகுநாட்களாக நான் எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் நந்தலாலா திரைப்படம் இந்த மாதம் 26ஆம் தேதி வெளியிடப்படும் என்று இந்த முன்னோட்டம் தெரிவிக்கிறது,
I can’t wait!

இயக்குனர் மிஷ்கின், இசை இளையராஜா இருவரும் இணைந்து கலக்கியிருக்கிறார்கள்.
முன்னோட்டத்தின் பின்னணி இசையே மிரள வைக்கிறது.

குளிர் மழை காக்க – kulir mazhai kaakka

kulir-mazhai-kaakaசமீபத்தில் விருத்தங்கள் மீது ஒரு தனிப்பட்ட ஆர்வம் ஏற்பட்டதில், சில தேடல்களைத் தொடர்ந்தேன்.
அப்போது தான், ரஞ்சனி காயத்ரி பாடிய “குளிர் மழை காக்க” என்கிற இந்த விருத்தம் காதில் பட்டது.
நீங்களும் கேட்டு ரசியுங்கள்.

Listen to குளிர் மழை காக்க

குளிர் மழை காக்கக் குடை பிடித்த கிரிதாரி
துளிரிடை த்ரௌபதி துகில் நீட்டிய உபகாரி
பிளிறு கேட்டோடி களிறு மீட்ட சக்ரதாரி
வளர்த்தென்னை இங்கு பரிபாலி….

பொருள்:
ஓரளவுக்கு எளிமையான பாடல் தான்.
குளிர் மழையில் இருந்து மக்களைக் காப்பதற்காக, கோவர்த்தன மலையைக் கைகளில் தூக்கி நிறுத்தியவனே,
த்ரௌபதியின் மானம் காக்க, ஆடை கொடுத்து உதவியனே,
முதலையிடம் மாட்டிக் கொண்டு பிளிறிய ஆண்யானையின் குரலைக் கேட்டு ஓடிப் போய் காப்பாற்றியவனே
என்னையும் வளர்த்து அருள்செய்.

தமிழ் உச்சரிப்புக்காகவே ரஞ்சனி காயத்ரியைப் பாராட்டலாம். கேட்டு மகிழுங்கள்.

நன்றி:
ஜீவா வெங்கட்ராமனின் பதிவு, இதே பாடலைப் பற்றி
rasikas.org
bollywood-mp3.com

குரலாய் வாழும் ஸ்வர்ணலதா

swarnalathaஸ்வர்ணலதாவின் திடீர் மறைவு, தமிழ் சினிமா இசைக்கும், என்னைப் போன்ற ரசிகர்களுக்கும் ஒரு சோகமான நிகழ்வு…
சொல்வனத்தில் மிக அழகாக அவரின் பல பாடல்களைத் தொகுத்து வழங்கியிருக்கிறார்கள்.

அவரின் “என்னுள்ளே என்னுள்ளே”, “மாலையில் யாரோ”, “போறாளே பொன்னுத்தாயி”, “எவனோ ஒருவன்” என எத்தனையோ பாடல்கள் எப்படியும் உங்கள் காதுகளை எட்டிவிடும்.
ஆனால் அவ்வளவாகக் கேட்கப்படாத அவரின் சில பாடல்களை இங்கே தருகிறேன்.

பாடல்: பாரடி குயிலே
இசை: இசைஞானி
படம்: நாங்கள்

Listen to பாரடி குயிலே

பாடல்: அந்திக் கருக்கையிலே
இசை: வித்யாசாகர்
படம்: அள்ளித் தந்த வானம்

Listen to அந்திக் கருக்கையிலே

இதே படத்தில் இருந்து “தட்டான் கிடைக்கலையோ” என்று இன்னும் உருக்கமான பாடலும் ஸ்வர்ணலதா பாடியிருக்கிறார். அதைத் தேடல் உள்ளவர்கள் கேட்கட்டும்.

பாடல்: புதிய பறவை பறந்ததே
இசை: இசைஞானி
படம்: தென்றல் வரும் தெரு

Listen to புதிய பறவை பறந்ததே

ஸ்வர்ணலதா,
குரலாய் என்றென்றும் வாழ்வாய் நீ!

நாடிய பொருள் கை கூடும் [naadiya porul kai koodum]

ரஞ்சனி காயத்ரிசமீபத்திய என் கர்நாடக இசைத் தேடலில் ரஞ்சனி & காயத்ரி சகோதரிகள் பாடிய சில விருத்தங்கள் என் காதில் பட்டது.
கேட்ட பிறகு இந்தப் பாடலை எழுதியது யார் என்று தேடி, இது கம்ப ராமாயணத்தில் இருந்து வருவது என் கண்ணில் பட்டது (நன்றி: R. பிரபு).
நான் கண்டதையும் கேட்டதையும் எழுதத் தானே இந்த கிறுக்கல்கள் தளமே!

நாடியபொருள் கைகூடும் ஞானமும் புகழும் உண்டாம்
வீடியல் வழியதாகும் வேரியங்கமலை நோக்கும்
நீடிய அரக்கர் சேனை நீறுபட்டழிய வாகை
சூடிய சிலையிராமன் தோள்வலி கூறுவோர்க்கே

சுருக் அர்த்தம் என்னவென்றால்,
பல அரக்கர்களின் சேனையை அழித்து சாம்பலாக்கி, வெற்றி வாகை சூடிய ராமனின் தோளின் வலிமையைப் பாடுபவர்க்கு, நினைத்த பொருள் கிடைக்கும், ஞானம், புகழ் உண்டாகும். அவரது வீடு நன்றாக இருக்கும். லக்ஷ்மியின் அருள் பார்வை கிடைக்கும்.
கமலை – லக்ஷ்மியை
வாகை – என்பது ஒரு மலர், வெற்றி பெற்றவர்களின் தோள்களில் மாலையாவது.
நீறு – சாம்பல்.

ரஞ்சனி காயத்ரி சகோதரிகள், ராகத்தையும் பாவத்தையும் தமிழ் உச்சரிப்பையும் சிதைக்காமல் பாடுவது நம் காதுகள் செய்த புண்ணியம்.
இந்த விருத்தத்தில் சிறிது நேரம் சஞ்சாரித்துவிட்டு, அடுத்த விருத்தத்தைத் தொடங்குகிறார்கள்.

நன்மையும் செல்வமும் நாளும் நல்குமே
திண்மையும் பாவமும் சிதைந்து தேயுமே
ஜென்மமும் மரணமும் இன்றித் தீருமே
இன்மையே ராம என்ற இரண்டெழுத்தினால்…

பெரிய விளக்கம் எதுவும் தேவையில்லை. மிக எளிமையான வரிகள். இதுவும் கம்ப ராமாயணத்தில் இருந்து வருகிறது.
“ராமா” என்ற இரண்டெழுத்தை மட்டும் இவர்கள் பாடுவதைக் கேளுங்கள்.

Listen to ரஞ்சனி காயத்ரி விருத்தம் - ராம நாமமே

Pages:12345678»

Close [X]